வெள்ளி, 25 மே, 2012

வழக்கு எண் 16/9 : ஓரடி முன்னே... ஈரடி பின்னே...


சென்னையில் சிறப்புக்காட்சி பார்த்தவுடன் நண்பர்கள் சிலர் புகழ்ந்த வேகத்தில் படத்தைப் பார்த்தே ஆகவேண்டுமென்று தோன்றியது. பற்றாக்குறைக்கு, ‘என் நாற்பது ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த படம் இதுதான்’ என்று பாரதிராஜா வும், பாலும்கேந்திரா ஒருபடி மேலே போய், ’நான் மாரடைப்பிலிருந்து தப்பி உயிர்பிழைத்ததே இப்படத்தைப் பார்க்கத்தான் என்று நினைக்கிறேன்’ என்றெல்லாம் பேசியதாகக் கேள்விப்பட்ட போது எனது நமைச்சல் உச்சகட்டத்தை அடைந்தது. சமீபத்தில் பார்க்கக் கிடைக்கிற உலகப்படங்கள் நம் இயக்குநர்களை தொந்தரவு செய்யத் தொடங்கியிருப்பதற்கான வெளிச்சக் கீற்றுகள் தமிழ் சினிமாவில் தெரியத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக கதை சொல்வதில் இயக்குநர்கள் மாற்றங்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அலைபாயுதேயில் மணிரத்னம், இன்று காலை 8மணி.. என்றெல்லாம் அலைபாய்ந்தார். உடனே பலரும் அதைப் பிடித்துக்கொண்டு தொங்கத் தொடங்கினார்கள். ஆனால் அதை அர்த்தப்பூர்வமாக யாரும் பயன்படுத்தவில்லை. முதன் முறையாக தமிழில் பாலாஜி சக்திவேல் கதைக்குத் தேவையான அல்லது இந்தக் கதைக்குப் பொருந்தக்கூடிய ஒரு கதைகூறலைப் பரிசோதித்திருக்கிறார். ஆனால் கதையைப் புத்திசாலித்தனமாகக் கூறிவிடுவது மட்டும் சினிமாவாகி விடுவதில்லையே? உடனே உங்கள் மனக்குரல் (அதாங்க மைண்ட் வாய்ஸ்) ’இந்த விமர்சகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா! உருப்படியா படம் எடுக்க முயற்சிக்கிறதே சொற்பம். அவங்களையும் நொட்டை சொல்லியே ஓச்சுருவாங்க’ என்று சொல்வது கேட்காமல் இல்லை. ஆனால் இது குறை சொல்வதற்காகவே காத்திருப்பது அல்ல. வழக்கமாக ஒரு எதிர்பார்ப்புள்ள படம் படுத்துவிட்டால், திரையுலகிற்குள் சக சினிமாக்கார்ர்கள் பலர் நிம்மதிப் பெருமூச்சு விடுவர், அதற்காகவே காத்திருந்த்துபோல். அதற்குப் பொறாமைதவிர வேறுகாரணம் இருக்க முடியாது. ஆனால் சினிமாவிற்கு வெளியே என்னைப்போல் பலர், தமிழ் சினிமாவில் ஏதாவது பாய்ச்சல் நிகழ்ந்துவிடாதா? என்ற பதைப்பில் புதிய முயற்சிகளை எதிர்நோக்கியபடியே காத்திருக்கிறோம் என்பதால்தான் இத்தகைய கடுமையான் அணுகுமுறை.

இந்தப்படம் உண்மையிலேயே மிகவும் எதிர்பார்க்கப்பட்டதற்குக் காரணங்கள் சில உண்டு.. காதல் என்கிற மிக முக்கியமான படத்தை, கல்லூரி என்கிற எளிமையான சினிமாவை முயற்சித்த இயக்குநரின் அடுத்தபடம்... இரண்டுவருடங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்... மிக முக்கியமாக, புதிய டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முழுக்க எடுக்கப்படுகிற படம்.. அதிலும் பிரபலமான ஒளிப்பதிவாளர். இந்தப்படம் வெற்றிபெற்றால், டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவலாகும். குறைந்த மூலதனத்தில் புதிய இயக்குநர்கள் புதிய கதைகளோடு களமிறங்குவார்கள். ஒரு புதிய டிஜிட்டல் சகாப்தம் உருவாகக் கூடும் என்ற எதிர்பார்ப்புகலெல்லாம் மேலோங்கி இருந்தது. ஏனென்றால் டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி தமிழ்ச்சினிமா உலகில் குழப்பமான கருத்துக்கள் நிலவிவருகின்றன. ’என்னதான் தலைகீழாய் நின்றாலும் பிலிம்மில் படம் எடுப்பதற்கு இணை எதுவுமில்லை’ ’எடுக்கத்தெரிந்தவர்கள்தான் அதை வைத்து எடுக்க முடியும். நம் ஒளிப்பதிவாளர்களுக்கு இதைக் கையாளத்தெரியவில்லை என்பதுதான் பிரச்சனை’ என்று எதிரும் புதிருமாகப் பேசிவருகிறார்கள். பி.சி.ஸ்ரீராம் முழுதாக ஒரு படம் முயற்சித்தார். கமல்ஹாசன் ‘வசூல்ராஜா’ என்று எடுத்துப்பார்த்தார். சேரன் அவர் படத்தின் சில பகுதிகளை முயற்சித்துப் பார்த்தார். எதுவும் கைகூடாத நிலையில் இப்போது விஜய்மில்டன் ‘வழக்கு எண்ணில்’.

 ஒளிப்பதிவில் இரண்டு பிரச்சனைகள் தென்பட்டன. ஒன்று படத்தின் தெளிவு. புரொஜெக்சன் சரியில்லையோ என்று எண்ணும்படி. எப்படியும் அது தொழில்நுட்பத்தின் கோளாறாகத்தான் இருக்கமுடியும். குறிப்பாக ஒளியமைப்பு. காட்சிகள் மிகவும் தட்டையாகத்(flat) தோன்றியதற்கு இதுதான் காரணமாக இருக்கவேண்டும். ஒளியமைப்புதான் திரையின் இருபரிமாண வெளியை முப்பரிமானமான போலித்தோற்றத்தை உருவாக்குகிறது. இங்கே வீடியோத்தன்மை அப்படியே தென்படுகிறது. இரண்டாவது யதார்த்தம் என்ற பெயரில் ’ப்ரேம்கள்’ பல இடங்களில் மிகவும் தளர்வாகவும், சில இடங்களில் மிக நெரிசலாகவும் ஏனோதானோவென்று தென்பட்டன. நாங்கள் வேண்டுமென்றேதான் அப்படி அமைத்தோம் என்றும் சொல்லலாம். ஆனால் யதார்த்த்த்தில் ‘சினிமா யதார்த்தம்’ என்று ஒன்று உண்டு. அதாவது சினிமாவில் என்ன செய்தாலும் ஒரு இயக்குநர் ‘யதார்த்தம் போன்ற’ ஒன்றைத்தான் முயற்சிக்கிறாரேதவிர புறஉலகின் யதார்த்தத்தை அப்படியே பெயர்த்து வைத்துவிட முடிவதில்லை. நிஜக் கண்கள் பார்க்க இயலும் பெரும்பரப்பில் சினிமாவிற்கான ‘ப்ரேமை’ தேர்ந்தெடுக்கும்போதே, அங்கு ஒரு யதார்த்தம் ’செயற்கையாக’ கட்டமைக்கப்படுகிறதாகத்தான் அர்த்தமாகும். வழக்கு எண்ணில் காட்சிகள் ஒரு சினிமா அனுபவத்தைத் தரத் தவறிவிட்டன.

 திரைக்கதையை ’அ –நேர்கோட்டு’ (non-linear ) பாணியில் சொல்வதுபோலவே, காமராவைக் கையாள்வதிலும் ஒரு ‘நான் – லீனியர்’ பாணி உண்டுதான். சிட்டி ஆஃப் காட் (City of God), பாட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ் ( Battle of Algeriars) போன்ற படங்கள் அதன் உச்சத்தை தொட்டவை. விஜய்மில்டன் கைக்குள் அடங்கும் கேமரா என்பதால் அபத்தமான கோணங்களில் சிலவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். குப்பை போடப்போனால் குப்பைத் தொட்டிக்குள்ளிருந்து கேமரா பார்ப்பது, பீரோவைத் திறந்தால் பீரோவுக்குள்ளிருந்து கேமரா பார்ப்பது என்பதாக இருந்ததை கண் இமைகளுக்குள்ளிருந்து கேமரா பார்ப்பதாக மில்டனின் கேமரா மெனக்கெட்டிருக்கிறது. இத்தகைய அபத்தமான கோணங்கள் பார்வையாளனின் சினிமா அனுபவத்தை எவ்வகையில் மேம்படுத்துகின்றன? அதுவும் ஒரு தீவிரமான கதையைச் சொல்ல முயற்சிசெய்யும் சினிமாவில் இத்தகைய கேமரா கோணங்களும் அசைவுகளும் எவ்வளவு பாதகமாக முடியும் என்பதை ’வழக்கு எண்ணில்’ வெளிப்படையாகத் பார்க்க முடிந்தது.


 இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் பிரசன்னா என்று அழைக்கப்படும் கிதார் பிரசன்னா. இதைக் கேள்விப்பட்டதிலிருந்தே எனக்கு படத்தைவிட இசையைப் பற்றிய எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. அவருடைய இசை என்று தனியாக எதையும் கேட்டதில்லை என்றபோதும், உலகின் தலை சிறந்த கலைஞர்களுடன் இணைந்து நிகழ்த்துபவர், கல்லூரி நாட்களிலிருந்து கிதாரை கர்நாடக இசைக்குப் பழக்கி பரிசோதனைகள் நிகழ்த்துபவர் என்ற வகையில் அவர் ஏதாவது செய்துவிடக்கூடும் என்று எதிர்பார்த்தேன். உன்னை யாருய்யா எதிர்பார்க்க்ச் சொன்னா என்பதுபோல் இசை அமைந்திருந்த்து. சினிமா இசை என்பதே பிடிபட்டதாகத் தெரியவில்லை. வானத்தையே எட்டிப்பிடிப்பேன்.. நாலுவரிப்பாடல்தவிர சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் நடந்துவிடவில்லை. அதுவும் அவருடையதா எனத் தெரியவில்லை. உலக சினிமாவில் பின்னனி இசை என்பது வெகுவாக மாறிவிட்டது என்பதை இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் உணர்ந்த்தாகத் தெரியவில்லை. இன்னும் தீம் மீயூசிக் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் நம் இசை அமைப்பார்கள். குறிப்பாக எங்கு எவ்வளவு இசை வேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானித்தாலே பாதிப்பிரச்சனைகள் தீர்ந்துவிடும். பொதுவாகவே இசைக்கருவிகளில் விற்பனர்களாக இருப்பவர்கள், மிகச்சிறந்த இசையமைப்பாளர்களாக மிளிர்ந்ததாக எனக்கு நினைவில்லை. பண்டிட் ரவிசங்கர் உட்பட. பதேர் பாஞ்சாலியில் அவரின் இசையை ஆஹா.. ஓஹோவென்று சிலாகிப்பவர்கள் உண்டு. ஆனால் அது ஏனென்று எனக்கு இன்றுவரை புரிவதில்லை. மேலும் மனதை மயக்கும் அவருடைய ஒரு இசைக்கோர்ப்பையும் நான் கேட்டதில்லை. பொதுவாக செவ்வியல் இசையில், கருவியிசையில் மேதைகளாக விளங்குபவர்கள், ராக தாள கணக்குவழக்குகளில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், திறந்த சன்னலின் வழியே கேட்காமல் புகுந்துவிடுகிற காற்றுப்போல, தன்னெழுச்சியாக தவழ்ந்துவரும் இசையைத் தவறவிடுபவர்களாகவே இருக்கிறார்கள். பிரசன்னாவுக்கு என்ன பிரச்சனையோ?

 கதையும் மிக எளிதானதுதான். புதிய கதை என்று இருக்க வேண்டியதுமில்லை. ஒரு ஏழை, பாமரன் எல்லா இடங்களிலும் ஏமாற்றப்படுகிறான். வஞ்சிக்கப்படுகிறான். சீரழிந்த சமூகநிறுவனங்களின் ஊடான அவன் பயணம் உணர்ச்சிகரமானது. ஆனால் அவனுக்கு அவ்வளவு பெரிய முன்கதை சொன்னவர் நாயகியை பற்றிச் சுருங்கச் சொல்லி நிறுத்திக்கொள்கிறார். அவனுடைய பழைய கதை படத்தின் மையத்தையும் தூக்கிநிறுத்த உதவவில்லை. மிக ஆரம்பத்திலேயே பலியாடாக மாறப்போகிறவன் இவன் தான் என்பதும் ஊகிக்கக் கூடியதாகிவிடுகிறது. எதிர்பாரா அம்சம் அந்தப்பெண்ணின் எதிர்வினைமட்டுமே. இப்போதும் பாலஜிசத்திவேலின் சிறந்தபடமாக ‘காதல்’ தான் கண்முன் நிற்கிறது.

வெள்ளி, 11 மே, 2012

இங்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ (Inglourious Basterds): மேதமையின் உச்சம்

மனதை நெகிழச் செய்கிற உணர்ச்சிகரமான படங்கள் உண்டு. புத்திபூர்வமாக பார்வையாளனைத் திகைக்கச் செய்கிற படங்கள் உண்டு. ஆனால் பேச்சு மூச்சற்று நம்மை உலுக்கிவிடுகிற  படங்கள் சிலவே உண்டு. அந்த வகையான படங்களில் ஒன்றுதான் இங்லேரியஸ் பாஸ்டர்ட்ஸ். நான் ஏற்கனவே குவாண்டின் டொராண்டினோவின் ரசிகன் என்பதையும் இங்கு சொல்லியாகவேண்டும். 1994ல் பல்ப் ஃபிக்‌ஷன் என்ற படத்தின் மூலமாக நேர்கோட்டுத் தன்மையற்ற(non-linier) ஒரு கதைகூறுமுறையை சினிமாவில் பரிசோதித்தவர் குவாண்டின். அவரின் புதிய பாணி  கடந்த பதினைந்து ஆண்டுகளில் பல இயக்குநர்களால் உலகெங்கும் பரிசோதிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப் பட்டமை வரலாறு.

குவாண்டின் கருத்தியல் ரீதியில் பலரையும் ஈர்த்தவர் அல்ல. சினிமா என்ற ஊடகத்தை/ கலையை பின்நவீன காலகட்டத்திற்கு நகர்த்தியவர். ஒரு வகையில் ஹிட்ச்காக் போன்றுதான். ஹிட்ச்காக்கின் படங்கள் திரில்லர் வகையைச் சார்ந்தவை. மனித மனதிற்குள் ஆமிழ்ந்து கிடக்கும் அச்சம், திகில்  ஆகிய உணர்வுகளை உசுப்பி வேடிக்கை பார்த்தவை அவர் படங்கள். மனிதர்களின் எளிய ஆதாரமான உணர்ச்சிகளைக் திரைக்கலையின் உச்சத்திற்குக் கொண்டுசென்றார். ஆனால் கருத்து ரீதியாக அவர் மேன்மையான விசயங்களைப் பேசினார் என்று சொல்வதற்கில்லை என்பதால் அவரை சினிமா வரலாற்றில் ஓரமாக நிறுத்திவிடமுடியாது. ஏனென்றால் நவீன சினிமாமொழியைக் கலாபூர்வமாகக் கட்டமைத்தவர்களில் ஒருவர் அவர் என்பதால். குவாண்டினும் அப்படித்தான். நவீன கால சினிமா மொழியின் இலக்கணங்கள் இறுகி செல்லரித்து, சலிப்பூட்டத்தொடங்கிய நேரத்தில் அவர் ஒரு குறுக்குச்சந்தில் பயணிக்கத் தொடங்கினார். முன்னோடிகள் போடும் கோடு ரோடாக மாறும்தானே! 

 
முதன் முறையாக பல்ப் ஃபிக்‌ஷனைப் பார்த்த விமர்சகர்களுக்கு இந்தப் படத்தை எப்படி மதிப்பிடுவது என்று தெரியவில்லை. ஆனால் விமர்சகர்களுக்காக அவரும் அவர் சினிமாக்களும் காத்திருக்கவில்லை. அடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு புதிய வாசல்களைத் திறந்துவிட்டது  அந்தப்படம்.
 
 
குவாண்டினோவுக்கு 7வது அல்லது 8வது படமாகவோ இங்லேரியஸ் பாஸ்டர்ட்ஸ் இருக்கும். முன்பின் நகர்ந்து கதை சொல்வது என்றுமட்டும் இல்லாமல் கதையமைப்பிலேயே ரெம்பவும் வித்தியாசமான முயற்சி இது. வரலாற்று நிகழ்வுகளைக் கதையாக்குவதற்கென்று சில முறைகள் உண்டு. வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு அப்படியே கதைபின்னுவது. அல்லது தங்களுக்கு உகந்த வகையில் வரலாற்றை வாசிக்க முயற்சிப்பது. அல்லது வரலாற்றில் விடுபட்ட இடங்களைத் தம் புனைவால் இட்டு நிரப்புவது. இப்படி பலவகையான படங்கள் உள்ளன. இந்தப்படத்தில் உலகமே அறிந்த ஒரு வரலாற்று நாயகனுக்கு வேறொரு முடிவை எழுதிப் பார்க்கிறார். அவரின் அபாரமான திரைக்கதையமைப்பில், குவாண்டினின் புனைவு, உண்மையைப் போல் உருக்கொண்டு நிற்கிறது. ஹிட்லர் விசமருந்தி, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு  இறந்து எரிக்கப்பட்டதாகவும், தப்பிச் சென்றதாகவுமான இரண்டு  பதிவுகள் உண்டே தவிர, வேறு புதிர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் ஒரு திரைக்கதையை எழுதிப்பார்த்திருக்கிறார்.

நாஜிகளின் ஆக்ரமிப்பில் இருந்த ப்ரான்சின், கிராமப்புறமொன்றில், காணாமல் போன யூத குடும்பங்களைக் கணக்கெடுக்கிறார்கள் நாஜிகள். ஒளிந்து வாழ்ந்த குடும்பத்திலிருந்து தப்பிப்பிழைக்கும் 14வயது சிறுமி, நான்கு ஆண்டுகள் கழித்து பாரிசில், ஒரு திரையரங்க உரிமையாளராகிறாள். இதற்கிடையில் நாஜிகளை ஒழித்துக்கட்டும் யூத அமெரிக்க இளைஞர் படையின் தலைவராக பிராட் பிட். நூறு நாஜிகளின் தலைத்தோலையாவது உரித்தாக வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். தப்பிப்பிழைத்த அந்தச் சிறுமி, நாஜிகளின் பிரச்சார சினிமா ஒன்றைத் தன் திரையரங்கில் சிறப்புக்காட்சியாகத் திரையிடச் செய்து, அங்கு  வர இருக்கும் ஹிட்லர் உள்ளிட்ட முக்கிய நாஜி ராணுவத் அதிகாரிகளைக் கொல்லத் திட்டமிடுகிறாள் என்பதை கதைச் சுருக்கமாகக் கொள்ளலாம்.

படத்தை 5 பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார். இதுவும் அவரின் வழக்கமான பாணிதான். ஏறத்தாழ 5காட்சிகள் என்று சொல்லும் அளவுக்கு நீண்டு விரியும் காட்சிகள்.
முதல்காட்சியிலேயே தன் மேதமையை நிருபித்திருப்பார்  இயக்குநர். விசாரணைக்கு வரும் நாஜி அதிகாரி, அந்த வீட்டின் உரிமையாளன், அங்கு நடக்கும் விசாரணை,  கேள்விகள்- பதில்கள் – ஷாட்கள்- நடிகர்கள். மிக நீண்ட காட்சிகளைத் தயக்கமின்றி அமைக்கும் டொராண்டினோ, இப்படத்திலும் முதல் காட்சியையே 20நிமிடங்களுக்குமேல் நீட்டித்திருப்பார். குறிப்பாக விசாரணை அதிகாரியாகவரும்  Christoph Waltz, இந்தப்படத்தின் நடிப்பிற்காக ஆஸ்கார் விருதுபெற்றவர். அந்த வீட்டின் உட்புறம். இருள் மேலோங்கிய ஒளியமைப்பு. தைல வண்ண ஓவியம் போன்ற படச் சட்டங்கள். இலக்கியத் தரமான உரையாடல்கள்.

 

தன் படங்களில் மிகமுக்கியமான படமாக இதைக் கருதினார் டொராண்டினோ. 10 ஆண்டுகளாக இதன் திரைக்கதையை அசைபோட்டபடி இருந்தார். இடையிலேயே ‘Kill bill’ இரண்டுபாகங்களையும் எடுத்துமுடித்தார். சிறந்த படம், படத்தொப்பு, ஒளிப்பதிவு, திரைக்கதை, இயக்கம் ஆகிய பிரிவுகளுக்கு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

       என்னியோ மொரிக்கோனின் (Ennio Morricone) பின்னனி இசை படத்தை வேறுதளத்திற்கு நகர்த்துகிறது. குறிப்பாக நாஜிகளின் தலைத்தோலை உரித்து, சிதறிக்கிடக்கும் மனித உடல்களுக்கிடையே பிராட்பிட்டும் நண்பர்களும் நிற்கும்போது ஒலிக்கும் இசை. விசில் ஒலியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. வன்முறைக்காட்சிகளை நம் இசையமைப்பாளர்கள் எப்படி கொடூரமாக கையாள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். 400படங்களுக்குமேல் பின்னனி இசைக்கோர்வைகளைச் செய்துள்ளவர் என்னியோ மொரிக்கோன்.


 


       இரண்டாம் உலகப்போர்/ நாஜிகள் பற்றிய படங்களில் இங்லோரியஸ் பாஸ்ட்டட்ஸ் ஒரு மைல் கல். எதிர்கால திரைப்படக் கலைஞர்களுக்கு இப்படம் ஒரு பாடப்புத்தம்.

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.