ஞாயிறு, 27 அக்டோபர், 2013

மஞ்ஞாடிக்குரு (Manjadikuru): அதிர்ஷ்டக்கார சிவப்பு விதைகள்





தெரிவுசெய்யப்படும் விதைகளைவிட உதாசீனம் செய்யப்படும் குறையுள்ள விதைகளே மண்ணில் விழுந்து புதைந்து செடியாய் முளைத்து எழும். அவைகளே அதிர்ஷ்டக்கார விதைகள் என்பதே இப்படத்தின் ஊடிழை.

 

உள்ளூரில் சினிமா கற்றுக்கொண்ட இளைர்கள் ஒருவகையான வீரிய இன (hybrid) திரைக்கதைகளை உலவவிட்டுக் கலக்கிக் கொண்டிருக்கையில் லண்டன் திரைப்படக் கல்லூரியில் படித்த அஞ்சலி மேனன் கேரளத்தின் ஆன்மாவை தொட்டுவிடும் அருமையான அலட்டலில்லாத ஒரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் குறிப்பிடுவதுபோல் இப்படம்வேர்களைத் நோக்கித் திரும்புகிற ஒரு பயணம்தான்

ஒரு புகைப்படத்தால் தூண்டப்பட்டு இந்தத் திரைக்கதையை எழுதியதாகக் கூறும் அஞ்சலி..இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியர்/ மளையாளி.

 ஒரு மரணச் சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வழக்கமான அவலச்சுவை வழிந்தோடும் ஒரு சூழலில் மகிழ்ச்சியான முகபாவங்களோடு நின்றிருந்த சிறுவர்குழாமின் முரண்பட்ட இருப்பே இந்த்த் திரைக்கதைக்கான உந்துதலாக அமைந்தாம். ஒரு பெரிய குடும்பத்தின் இறப்புச் சடங்கிற்காக ஒன்று கூடும் உறவினரிடையே இழப்பின் துயரத்தைச் சுமந்து நிற்கும் பெரியவர்களிடையே, எதிர்பாராமல் ஒன்று சேரும் சிறுவர்கள் புதிதாகக் கிடைத்த நட்பின் மகிழ்ச்சியில் திளைக்கும் எதிரும் புதிருமான உணர்வுகளின் ஊடே விரியும் எளிமையான கதை.


அந்நிய மண்ணில் வாழ நேர்ந்துவிடும் ஒருவனுக்கு வேறுபட்ட பல இடங்கள் இருந்தாலும் எதையுமே சொந்தம் கொண்டாட முடியாத இயலாமை மேலோங்கும்போது தன் பூர்வீக மண்ணின் வேர்களைத் தேடி ஓட வேண்டியவனாகிறான். என்னுடைய நாயகனான விக்கியும் அதைத்தான் செய்கிறான் என்கிறார். 
 
இந்தத் திரைக்கதையை எழுதும் போதுதான் மளையாளத்தைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்ட அஜ்சலி, ஆங்கிலத்தில் சிந்தித்து மளையாளத்தில் எழுதுவது பெரும் அவஸ்த்தையாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஒரு பெரிய குடும்பத்தின் தலைவர் இறந்துவிடுகிறார். மத்திய கிழக்கிலிருந்து புருஷன் மற்றும் கதை நாயகனா சிறுவன் விக்கியுடன் வரும் மகள் ஒருத்தி. லண்டனிலிருந்து நிறைமாத கர்ப்பிணியாய் இன்னொரு மகள். டெல்லியில் அரசு உயரதிகாரியான புருஷன் மற்றும் ஐ..எஸ்., தேர்வுக்குத் தயாராவது கெட்டுவிட்டதாக குறைபட்டுக்கொண்டிருக்கும் மகளோடு வந்திருக்கும் இன்னொரு மகள், உள்ளூரில் கஷ்ட ஜீவனம் செய்து கொண்டிருக்கும் கைக் குழந்தைக்குத் தாயான இன்னொரு மகள், தன் இருபதுகளில் நகஸலைட்டாக வீட்டைவிட்டு ஓடிப்போய் காவிவேட்டியோடு திரும்பி வந்து யாரிடமும் ஒட்ட முடியாமல் நிற்கும் மூத்தமகன். உள்ளூரில் தந்தையோடு இருந்து எல்லாச்சுமைகளையும் தான் சுமந்து தீர்த்ததான எரிச்சலில் கடனுக்கு வந்திருக்கும் உடன்பிறப்புக்களை சபித்தவாறு இருக்கும் இன்னொரு மகன். அவரவர் வாழ்வின் அவசரங்களுக்கிடையே உழன்று கொண்டிருக்கும் அவர்களை அங்கே இருத்தி வைத்திருப்பது 16ஆம் நாள் சடங்கு முடிந்தவுடன் வாசிக்கப்படவிருக்கும் தந்தையின் உயில். உயிலில் யாருக்கு என்ன? என்பது பற்றிய ஆர்வமே மேலோங்கியிருக்கும் அந்த 16 நாட்களும், துபாயிலிருந்து வந்திருக்கும் விக்கி எனும் சிறுவனின் நினைவலைகளாக விவரிக்கப்படுகிறது.


பொறாமையும் பாவனைகளும் நிரம்பிய பெரியவர்களின் உலகத்திலிந்து விலகி சிறுவனான விக்கி அவன் மாமாவின் குழந்தைகளுடன் கொள்ளும் புதிய நட்பும் அவர்களைவிட சற்றுப் பெரியவளான ரோஜா என்ற வேலைக்காரத் தமிழ் சிறுமியுடனான ஸ்நேகமும் அவனின் தற்காலிக உலகங்களாகின்றன. கறுப்பி என்றும் தமிழச்சி என்றும் அழுக்கானவள் என்றும் விளிக்கப்படும் ரோஜாவை அவளின் துயரங்களிலிருந்து விடுவித்துவிட முடியுமென்று நம்பும் விக்கி அவளை ஊருக்கு அனுப்பிவிட முயன்று, கன்றிப்போன காயங்களுடனும் கண்ணீருடனும் ரோஜா திரும்பவும் அங்கேயே கொண்டுவந்து விடப்படுவதை பார்த்தபடியே துபாய்க்குக் கிளம்ப வேண்டியதாகிறது.


ஒரே சொத்தான அந்த பிரம்மாண்டமான வீட்டை பாட்டியின்  ஜீவபரியந்தம் அவரின் பெயருக்கு எழுதிவிடும் தாத்தாவின் உயில் எல்லோரையும் அவசரமாக ஊருக்கு அனுப்பிவிடுகிறது. தாத்தாவின் மறைவுக்கப்புறம் 20 வருடங்கள் உயிர்வாழ்ந்த பாட்டியைப் பராமரித்துவந்த ரோஜாவை பாட்டியுடன் புகைப்படமெடுக்கும் இருபதுகளில் இருக்கும் இளைனான விக்கியின் குரலிலேயே மொத்தக் கதையும் விவரிக்கப் படுகிறது.


படத்தில் தாத்தாவாக வரும் திலகன் பிணமாகவும் பின் புகைப்படமாகவும் இரண்டொரு ஷாட்களில் மட்டுமே தென்படுபவராகவும் மட்டுமே வருகிறார். வளர்ந்த ரோஜாவாக வரும் பத்மப்ரியா கடைசி ஷாட்டில் பாட்டியின் தோளை கட்டிக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பவராக மட்டுமே வருகிறார். பெரிய வேடிக்கை, நாயகனான பிரிதிவிராஜின் குரலிலேயே மொத்தக் கதையும் சொல்லப்பட்டாலும் கடைசிக் காட்சியிலே சில நிமிடங்களே வந்து போகிறார் அவர்.இது மளையாளத்தில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன்.

கதை கூறுவதற்காக எந்தப் புதிய உத்திகளையும் பரிசோதிக்காமல் நேர்கோட்டில் இயல்பாய் விவரிக்கப்படும் இப்படத்தின் இயக்குநர் எதிர்காலத்தில் மிகவும் காத்திறமான படைப்புகளை இந்திய சினிமாவிற்குக் கொடுப்பார் என்று நம்ப இடமிருக்கிறது. தொழில்நுட்ப விசயங்களிலும் ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு இசை போன்றவற்றிலும் தென்படும் முதிர்ச்சி இந்திய இயக்குநர்களிடையே அரிதான ஒன்று. குறிப்பாக நவீன சத்தங்களின், கருவிகளின் ஒத்தாசையில்லாமல் இந்தியக் கருவிகளைக் கொண்டே அற்புதமான பின்னனி இசையை வடிவமைத்திருக்கிறார்.

ஞ்சலி மேனன்
இவர்தான் உஸ்தாத் ஓட்டல்படத்தின் திரைக்கதையாசிரியர். இரண்டு படங்களிலும் தமிழர்களைப் பெருமைப்படுத்தியிருப்பது தற்செயல்தானா என்று தெரியவில்லை. உஸ்தாத் ஓட்டலில் நாயகனை அவன் தாத்தா வாழ்வின் அர்த்தத்தை நீ அறிந்துகொள்ள வேண்டுமானால் மதுரைக்குப் போய் என் நண்பரிடம் இந்தப்பணத்தைக் கொடுத்துவிட்டுவாஎன்று அனுப்பி வைப்பார். மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து அந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். (அஜ்சலி மேன்னுக்குத் தெரிந்தது மதுரைக்கார அரிவாள் இயக்குநர்களுக்குப் பொருட்டாகத் தெரியாத்தில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்) இந்தப் படத்திலும் பழி சுமத்தப்படும் வேலைக்காரத் தமிழ்ச் சிறுமி ரோஜாதான் பாட்டியின் தள்ளாத வயதில் கூட இருப்பவள். சிறுமி அருமையாக நடித்திருந்தாள்.
 
கேரள அரசின் விருதுகள் உட்பட பல சர்வதேச விருதுகளை வென்ற ‘ஞ்ஞாடிக்குரு’ வேர்களை அரிக்கத் தொடங்கியிருக்கும் நவீன வாழ்க்கையின் ஒரு துளி.  

வியாழன், 17 அக்டோபர், 2013

எ டேஜ்சரஸ் மெத்தட் (A Dangerous Method): மனமெனும் புதிர்வெளி...




1993இல் ஜான் கெர் (John Kerr) எனும் எழுத்தாளர் யுங், ஃப்ராய்ட் மற்றும் யுங்கிடம் சிகிச்சைக்கு வந்தவரான சபீனா (Sabina Spielrein) எனும் இளம்பெண் ஆகியோரைப் பற்றிய வரலாற்றுச் சம்பவங்களை கொண்ட நூல் ஒன்றை எழுதினார். அந்நூலை அடியொற்றி 2002 இல் மேடையேற்றப்பட்ட The Talking Cureஎனும் நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட திரைக்கதையே இப்படம். நாடகத்தையும் திரைக்கதையையும் எழுதியவர் கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் (Christopher Hampton).

2011இல் வெளியான ஜெர்மன் கனடா கூட்டுத்தயாரிப்பான இப்படம் சைக்கோ அனாலிஸிசின் (Psychoanalysis) தோற்றுநரான சிக்மன்ட் ஃப்ராய்ட், அனலிடிகல் சைக்காலஜியை( Analytical Pschycology) உருவாக்கிய கார்ல் யுங் அவரின் நோயாளித் தோழியான சபீனா ஆகிய மூவருக்குமிடையேயான சம்பவங்களைக் கொண்ட கதையாகும். ஆனால் யுங் – சபீனா இடையேயான காட்சிகளே பிரதானமானவை.


ஹிஸ்டீரியா எனும் மனநோயினால் பாதிக்கப்பட்ட சபீனா இளம் மனநல மருத்துவரான யுங்கிடம் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுகிறார். வார்த்தைகளுக்கிடையிலான தொடர்புகளைக் சொல்லச் செய்வதன் மூலமாகவும் கனவுகளை விளக்கப்படுத்துவதன் மூலமாகவும் சபீனாவின் நோயின் மூலத்தைக் கண்டறிய முற்படுகிறார் யுங்.

நிஜத்திலோ கற்பனையிலோ ஒரு  குழந்தைக்கு ஏற்படும் பாலியல் அனுபவங்களே எல்லா மன நோய்களுக்குமாக மூலகாரணம் எனும் ப்ராய்டின் அணுகுமுறையின் படி தொடர் சிகிச்சையின் மூலம் சபீனாவின் குழந்தைப்பருவத்தை அலசுகிறார் யுங். கண்டிப்பான சபீனாவின் தந்தை சபீனாவின் சிறுவயதில் அவளை தண்டிக்க முற்படும் போதெல்லாம் அவளை நிர்வாணமாக நிறுத்துகிறார். சபீனாவின் தாயோ தன் கணவனுக்கு உண்மையில்லாதவளாக இருக்கிறாள் என்பதையெல்லாம் சபீனாவிடமிருந்து அறிந்துகொள்ளும் யுங் அவளின் சராசரிக்குக் கூடுதலான புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்படுகிறார். நோயாளியுடன் உடல்தொடர்பு கூடாது எனும் பழைய அறத்தை மீறுகிறார். நாளடைவில் அந்த மருத்துவமனையில் யுங்கிற்கும் இன்னொரு  ,மருத்துவருக்கும் உதவியாளர் போலாகிறார் சபீனா. உளவியல் மருத்துவம் பயிலத்தொடங்கும் சபீனாவின் ஆய்வுக்கட்டுரைக்கு (thesis) உதவுகிறார். சுயமான மகத்தான படைப்பாக்கங்கள் பெரும் முரண்களிலிருந்தே மகிழ்க்கின்றன என்ற அவரின் கருதுகோள்கள்  எதிர்பாலின ஈர்ப்பு, மரபான நம்பிக்கைகளைத் தகர்ப்பதான உள்ளுணர்வின்பாற்பட்டது என்பதாக நீள்கிறது.













உளவியலின் சிடுக்கான கோட்பாடுகளைப் பரிச்சயம் உடையவர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாய் அமையக்கூடும். மற்றபடி நேர்த்தியான தொழில்நுட்பங்களோடு அற்புதமான நடிகர்களின் பங்களிப்பால் குறிப்பாக சபீனாவாக நடித்திருக்கும் கெய்ரா கிறிஸ்டினா நைட்லியால் ( Keira Christina Knightley)  இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே ப்ரைட் அன்ட் பிரிஜுடிஸ் (Pride & Prejudice) பைரேட்ஸ் ஆஃப் கரிபியன்  (Pirates of the Caribbean) மூன்று பாகங்களிலும் நடித்திருக்கும் கெய்ரா, ஹிஸ்டீரியாவின் உச்சத்தில் வெளிப்படுத்தும் நடிப்பு ஒரு மைல்கல். யுங்காக நடித்திருக்கும் மிக்கேல் ஃபாஸ்பென்டரும் (Michael FassBender) ஃப்ராய்டாக நடித்திருக்கும் விக்கோ மார்ட்டென்சனும் (Viggo Mortenswn) ஏற்கனவே பிரபலமான நடிகர்கள். பின்னனி இசையும் சிறப்பானது.







திங்கள், 7 அக்டோபர், 2013

தி செசன்ஸ் (THE SESSIONS) : மாற்றுத்திறனாளியின் பாலியல் - உரையாடலுக்கான ஒரு தொடக்கம்




மிக இளம்வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக்கீழ் அசைவற்றவராக, நுரையீரல் செயல்பாடும் சிக்கலான நிலையில் இரும்புக் கூண்டுக்குள் பெரும்பாண்மை வாழ்க்கையைக் கழித்துவந்த மார்க் ஓ பெரின் (Mark O'Brien) ஒரு கவிஜர், பத்திரிக்கையாளர். அவர் 1990இல் சன் இதழில் "On Seeing a Sex Surrogate" எனும் தலைப்பில் தன் சொந்த அனுபவத்தை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதினார்.

நான் என்னுடைய வாழ்க்கையில் பெண்கள் ஆண்கள் என்று பலரையும் மோகித்திருக்கிறேன். யாராலாவது நேசிக்கப்படவேண்டும். யாராவது மோகித்து என்னைத் தூண்டி பாலியல் இன்பத்துக்குள் இழுத்துச் செல்லவேண்டும் என்று கற்பனை செய்துகொள்வேன, ஆனால் அப்படி எதுவும் நடக்கவே இல்லை எனும் பெரின் பாலியல் சுதந்திரம் வழிந்தோடும் அமெரிக்காவில் தன்னுடைய 38ஆவது வயது வரையில்  பாலியல் அனுபவம் கிட்டாதவராக இருந்தார். தன்னுடைய ஆண்மை, தகுதி பற்றிய மனக்குழப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்க, மறுக்கப்பட்ட பாலியல் வேட்கையுடன் கடவுளை சபித்தவராக விரக்தியின் விளிம்புக்குச் சென்ற போது, பாலியல் தேவைகளுக்காக வாடகைக்கு ஒரு பெண்ணை அமர்த்திக்கொள்வது பற்றிய ஆலோசனைகளைப் பெறுகிறார். 

  
மாற்றுத் திறனாளிகளின் பாலியல் பிரச்சனைகளைக் கையாளும் மையம்(Center on Sexuality and Disability) ஒன்றைத்தொடர்பு கொள்ளும் பெரின் அங்கு சில தொடர்புகளைப் பெறுகிறார். Sex Surrogate (வாடகைப் பாலியல் துணை / பணியாளர் என்று மொழிபெயர்க்கலாமா?) ஒருவரை அணுகலாம் என்று முடிவுசெய்த போது, வாடகைத் தாய்(Surrogate mother)  எனும் பதம் போல இது தெளிவாக இல்லை என்பதை பெரின் உணர்கிறார். தொழில்முறை பாலியல் தொழிலாளிகளுக்கும் இவர்களுக்குமான  வேறுபாடு பற்றிய குழப்பங்கள் படிப்படியாக நீங்குகின்றன. Sex Surrogate என்பவர் சமூகப்பணியில்(social work) முதுகலைப் பட்டம்பெற்று பதிவு செய்துகொண்ட தாதியாவார். அவர்கள் மாற்றுத் திறனாளிகளின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்கிறவர்கள் அல்ல. மாறாக அவர்களின் சுயமரியாதைக்குப் பங்கம் விளையாமல் அவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்துப்வர்கள். அவர்கள் பாலியலின் உடல் மற்றும் உளச் செயற்பாடுகளை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் என்பதால் அவர்களால் சிக்கலான சூழல்களையும் எதிர்கொள்வது ஏதுவாகிறது. அவர்களை மாற்றுத் திறனாளிகள் நேரடியாக அமர்த்திக் கொள்வதும் இயலாது என்பதோடு ஆறிலிருந்து எட்டு அமர்வுகள் மட்டுமே சிகிச்சைக்கான எண்ணிக்கையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையாளரோடு காதல் வயப்பட்டுவிடக்கூடாதென்ற விதிமுறையும் உண்டு. ஒரு மணி நேர அமர்வுக்கு 70டாலர்கள் குறைந்தபட்சக் கட்டணம்.

எல்லாவற்றையும் படித்தும் கேட்டும் தெரிந்துகொள்ளும் பெரின்செரில்’ (Cheryl) எனும் வாடகைப் பாலியல் பணியாளரைக் கண்டு பிடிக்கிறார். அதன்பின் பெரினின் எதிர்பார்ப்புகள், அவர்களின் முதல் சந்திப்பு, ஒவ்வொரு அமர்விலும் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறது அந்தக் கட்டுரை. மாற்றுத் திறனாளிகளின் பாலியல் பற்றித் தொடர்ந்து எழுதிவந்த பெரின் தனது 49ஆவது வயதில் மரணித்தார். (கட்டுரையை முழுமையாகப் படிக்க: http://thesunmagazine.org/issues/174/on_seeing_a_sex_surrogate)

இந்தக் கட்டுரை ஒருவகையில் மாற்றுத் திறனாளிகளின் பாலியல் தேவைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கியது எனலாம். இந்தக்கட்டுரையைப் படிக்கத் தூண்டுகோலாக இருந்தது தி செசன்ஸ்’ (The Sessions)   என்ற ஆங்கிலப்படம்தான். 2012இல் வெளியான இப்படம் மேலே விவரிக்கப்பட்ட "On Seeing a Sex Surrogate" எனும் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு குறைந்தபட்ச இடைச் செருகல்களோடு தயாரிக்கப்பட்டது. இப்படத்தை இயக்கியவர் பென் லிவின் (Ben Lewin). இவரும் ஆறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்பதாலோ என்னவோ இக்கட்டுரையை இணையத்தில் படித்து உந்துதல் பெற்று பெரினுடன் உளவியல் சிகிச்சையாளராக இருந்த சூசன் மற்றும் பாலியல் சிகிசையாளரான செரில் ஆகியோருடன் கலந்துரையாடி இத்திரைக்கதையை அமைத்துள்ளார். படுத்த படுக்கையிலிருந்து உட்காரும் திறன்கூட அற்றவரான ஒருவரை நாயகனாக வைத்து 95 நிமிடங்கள் ஓடும் ஒரு திரைப்படத்தை எடுக்கமுடியும் என்பது ஆச்சரியமான உண்மை. இப்படத்தில் பெரினாக நடித்த ஜான் ஹாக்ஸூம்(John Hawkes) செரிலாக  நடித்த ஹெலன் ஹன்ட்டும் (Helen Hunt) மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்திருந்தார்கள்.


முதல் உலக நாடுகளில் மாற்றுத் திறனாளிகளின் பாலியல் பிரச்சனைகளை ஆலோசிப்பதற்கான மையங்களும், அதைப்பற்றிய பல்கலைக்கழக படிப்புகளும் அவர்களுக்கான பாலியல் சிகிச்சையாளர்களும் இருக்கிறார்கள் என்பதைப்படிக்கும்போது இந்தியச் சூழல் எப்படியிருக்கிறது எனும் ஒப்பீடு நம்மை வந்தடைவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்திய நகரங்களின் நடைபாதைகளில் இருக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர்களில் முட்டிக்கொள்ளும் பார்வையற்றவர்கள், சக்கர நாற்காலிகள் செல்லமுடியாத படிக்கட்டுகளைக் கொண்ட பொது அலுவலகங்கள், மாற்றுத்திறனாளிகளை மனதில் கொள்ளாத பொதுக்கழிப்பறைகள் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளையே தீர்க்க முயற்சிக்காத இந்திய சமூகம் அவர்களின் பாலியல் தேவைகளைத்தானா கணக்கில் கொள்ளப்போகிறது. ஆனால் உலகிலேயே அதிக மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சமூகம் நமதுதான். அதேபோல் அவர்களை பொருட்படுத்தாத அநாகரிக சமூகமும் நம்முடையதுதான்.
2001 குடிமைக் கணக்கெடுப்பின் படி 2.19 கோடி மாற்றுத்திறனாளிகள் (பார்வைக் குறைபாடு, கேட்க முடியாதவர்கள், பேச்சுத்திறனற்றவர்கள், மனநலம் மற்றும் இதர உடல்திறன் குன்றியவர்கள்) நம்நாட்டில் வாழ்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் 465 குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்துள்ளன என்கின்றன செய்தித்தாள்கள். (தினமலர் செய்தி 25.08.2013) செப்டம்பர் மாதத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த பார்வையற்றவர்களின் போராட்டம் பொதுமக்களால் கண்டுகொள்ளப்படவேயில்லை என்பதோடு சாலைமறியல் செய்தவர்களை கைதுசெய்த தமிழக போலீசார் அவர்களைக் கைதுசெய்து எந்த இடம் என்று சொல்லாமல் எங்கோ இறக்கிவிட்டுச் சென்றார்களாம். வேறுவழியில்லாமல் அங்கேயே தூங்கி எழுந்து காலையில் விசாரித்தபோதுதான் தெரிந்த்து அது ஒரு சுடுகாடு என்பது.   என்பதெல்லாம் நம் கவனத்தில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.