திங்கள், 9 ஜூன், 2014

பேசாதவர் பேசினால்... மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்






மணிரத்னம் பொதுவாக அதிகம் பேசாதவர். தன் படங்களைப் பற்றி விரிவாக எங்கும் பேசியதில்லை. அவரைப் பற்றிய பல்வேறுவிதமான விமர்சனங்களுக்கு இடமுண்டு என்றாலும் 1980களில் இந்திய சினிமாவின் முகத்தை மாற்றியவர் என்பது நிஜம். சினிமா பற்றிய, அவரின் படங்கள் பற்றிய முழுமையான உரையாடலாக வெளிவந்திருக்கும் நூல் இது. இந்நூல் மணிரத்னம் பற்றிய எதிர்மறையான அபிப்ராயங்களை மாற்றுகிறது என்றே சொல்லவேண்டும்.

இந்நூல் முழுமையும் பத்திரிக்கையாளர் பரத்வாஜ் ரங்கன் மணிரத்னத்துடன் பல்வேறு அமர்வுகளில் உரையாடியவைகளைத் தொகுத்துள்ளார். மணி அவர் படைப்புகளைப் பற்றி மிக நேர்மையாகத் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது முக்கியமானது. குறிப்பாக உரையாடுபவர், சில காட்சிகளைப் பற்றிய கூடுதல் அர்த்தங்களைச் சுமத்த முனையும்போது, ஆமாம் என்று ஒற்றைவார்த்தையில்  அதைத் தன் மேதாவித்தனமாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளாதவராக இருப்பது அவரின் ஆளுமைக்கு ஒரு சான்று. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் சுருக்கமாக 'நான் அப்படி நினைத்து அந்தக்காட்சியை எடுக்கவில்லை. அது சாதாரணமானதுதான்' என்று மறுத்துவிடுகிறார்.
 அவருடைய ஒவ்வொரு படக்கதைகளும் உருவான விதம், படப்பிடிப்பு அனுபவங்கள், படங்களின் வெற்றி தோல்வி பற்றிய அவரின் பார்வை ஆகியன இளம் இயக்குநர்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.  தன் பட உருவாக்கத்தில் எழுத்தாளர்களைக் இணைத்துக் கொண்ட அனுபவங்கள், குறிப்பாக சுஜாதா, ஜெயமோகன் ஆகியோரோடு வேலைசெய்தமை பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார். இளையராஜா, ரஹ்மான் பற்றிய அவரின் கணிப்புகள், பணியாற்றிய போதான அபூர்வமான தருணங்களையும் பதிவு செய்துள்ளார். பாடல்களை கதை கூறலின் பகுதியாக மாற்றியவர் மணிரத்னம் என்ற வகையில் பாடல்களின் தேவை, உருவாக்க முறைகளைப் பற்றியதான பதிவுகள் சுவையானவை.

இந்த நூலில் விடுபட்ட அம்சம் என்பது மணிரத்னத்தின் படங்களைப் பற்றிய இன்னொரு தரப்பினரின் பார்வைவையை உரையாடியவர் விவாதத்திற்குள்ளாக்காததே. காரணம் பரத்வாஜ் ரங்கன் மணிரத்னத்தின் தீவிர விசிறியாகமட்டுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். விசிறியாக இருந்ததனால் மட்டுமே அவரை அணுக முடிந்ததோ எண்ணவோ? ஆனாலும் இத்தகைய உரையாடல்கள் தமிழ்ச்சூழலுக்கு மிக அவசியமானவை.
  
 நம் இயக்குநர்கள் திரைக்கதைகளைப் புத்தகங்களாக வெளியிடுவதை விடுத்து தங்கள் பட உருவாக்க அனுபவங்களை நேர்மையாகப் பதிவு செய்வது எதிர்கால இயக்குநர்களுக்கு உரமாக அமையும். குறிப்பாக பாரதிராஜா, பாலச்சந்தர் போன்றவர்களும் இத்தகைய பதிவுகளைச் செய்யவேண்டும்.

மணிரத்னத்தின் எல்லாப் படங்களையும் உன்னிப்பாகப் பார்த்து மிகுந்த காலத்தைச் செலவழித்து இந்த உரையாடலை நிகழ்த்திய பத்திரிக்கையாளர் பரத்வாஜ் ரங்கன் உண்மையிலேயே பாராட்டுக்குறியவர்.  அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலைத் தமிழில் அரவிந்த் சச்சிதானந்தம் சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் கிழக்கு வெளியீடாக வெளிந்திருக்கிறது.

திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான வரவு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.