திங்கள், 13 ஏப்ரல், 2015

காலங்களில் அது வசந்தம்: 60களின் தமிழ்த்திரையிசையை முன்வைத்து...




                       ('தி இந்து' தமிழ் நாளிதழ்1960களின் தமிழ்சினிமா பற்றிய சில கட்டுரைகளை உள்ளடக்கிய 'சித்திரை மலரை' வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 60களின் திரை இசை பற்றிய என் கட்டுரை)

            1930
களின் மத்தியில் பேசத்தொடங்கிய தமிழ் சினிமா பாடவும் தொடங்கியது. நாடகப் பாடல்களை நகல் எடுப்பதாகத்  தொடங்கிய தமிழ்த் திரையிசை கர்நாடக சங்கீதத்தை உள்வாங்கிப் பின் மேற்கத்திய இசைக்கூறுகளை இரவல் பெற்று மெல்லிசையாகி நாட்டுப்புற இசையில் கால்நனைத்து தங்குதடையில்லாத பெருமழையாய் பெய்துகொண்டிருந்தது. தமிழ்திரையிசையின் ஆகப்பெரும் ஆளுமைகளான இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் இருக்கும் காலத்திலேயே கடந்த பத்து ஆண்டுகளை தமிழ்த்திரையிசையின் கோடைக்காலம் என அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும். படைப்பூக்கமற்றுப் போய்விட்டார் இளையராஜா என்று கூறுவதைவிட, தமிழ்த்திரையிசையின் சகாப்தம் ஒன்றை தனியாய் எழுதிவிட்டு ஓய்ந்திருக்கிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மானின் படைப்பாற்றலுக்குப் பங்கமொன்றுமில்லை என்றாலும் எண்ணிக்கையில் குறைவான பாடல்களையே அவரால் தரமுடிகிறது. இந்த இருபெரும் ஆளுமைகளும் ஆலமரங்களாக இருந்தமையால்தான் அதற்குக்கீழே எந்த மரங்களும் முளைக்காமல் போய்விட்டனவோ என்னவோ. வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு 200க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களின் இம்சைகளால் தமிழ்க்காதுகள் புண்ணாகிக்கொண்டிருக்கிற காலத்தில் வாழும் பேறு பெற்றவர்கள் நாம். இந்தச் சூழலில் 60களின் திரையிசையைத் திரும்பிப்பார்ப்பது ஒரு சுகமான மீள்நினைவாக இருக்கிறது.

            அறுபதுகளின் மிகப்பெரும் இசை ஆளுமைகளாக கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதனுமே திகழ்ந்தார்கள். கே.வி.எம். ஏறத்தாழ 110 படங்களும் எம்.எஸ்.வி. 100 படங்களுக்கும் இசையமைத்திருந்தார்கள். ஆனால் அதிகபட்ச வெற்றிப்படங்களின் பின்னால் நின்றவரும் புதிய மெல்லிசைப்போக்கை வழிமொழிந்தவரும் எம்.எஸ்.வி.தாம்.

  
       ஏற்கனவே 1942இல் திரையிசைக்குள் நுழைந்து 50களின் இறுதிக்குள் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக மாறியிருந்தார்  கே.வி.மகாதேவன். 1918இல் நாகர் கோயில் அருகே கிருஷ்ணன் கோயிலில் பிறந்து நாடகக் கம்பெனிகளில் பணிபுரிந்து இசையமைக்கத் தொடங்கியவர் அவர். தமிழில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து 1990கள் வரை செயலாக இருந்த இசையமைப்பாளர் மகாதேவன் மட்டுமே. ஏறத்தாழ 50ஆண்டுகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் இந்தியத் துணைக்கண்டத்தில் மகாதேவன் மட்டுமாகத்தான் இருக்க முடியும். 90கள் வரை பற்பல பாணிகளை முயற்சித்துப் பார்த்தவராக இருந்தாலும் மகாதேவனின் பலம் ராகங்களை அடிப்படையாகக் கொண்ட சுவாரஸ்யமான மெட்டுக்களே. சவாலானதும் வெகுசன இரசிகனின் ரசனைக்கு உகந்ததுமான மெட்டுக்கள் அவருடையவை. மன்னவன் வந்தானடி, பாட்டும் நானே, ஒருநாள் போதுமா, மறைந்திருந்து பார்க்கும், காவியமா நெஞ்சில் ஓவியமா, ஆயிரங்கண் போதாது போன்ற பாடல்களே இன்றளவும் அவருக்குப் பெருமை சேர்ப்பனவாக உள்ளன.

            1952
இல் 'பராசக்தி' தொடங்கிவைத்த வசனசகாப்தம் சமூகப் படங்களுக்கான ஒரு திறப்பை ஏற்படுத்தியது. சுதந்திரத்திற்குப் பிந்தைய வளர்ச்சித்திட்டங்கள் கிராமங்களுக்குச் சாலைகளையும் மின்சாரத்தையும் கொண்டு சேர்த்தபோது டென்ட் கொட்டகைகள்என்று அழைக்கப்படும் திரையரங்குகள் தோன்றின. நகரத்து சொகுசாக இருந்த சினிமா கிராமங்களுக்கு நகர்ந்து குறைந்த செலவில் கனவுகளை விற்கத்தொடங்கியது. ஏற்கனவே மேடைப்பேச்சையும் நாடகங்களையும் அரசியலுக்கான ஊடகங்களாகப் பயன்படுத்திப் பழகியிருந்த திராவிட இயக்கத்தினர் சினிமாவின் வீச்சையும் சரியாகவே கணித்தனர். 1952இல் பராசக்திசமூக அவலங்களை சாமான்யர்களின் பார்வையில் பேசியபோது உரையாடல்களே பாடல்களாகஇருந்த நிலை மாறி வசனங்கள்தமிழ்ச் சினிமாவை ஆக்ரமிக்கத் தொடங்கின. 50களில் பிரச்சார நெடி தூக்கலான சினிமாக்களின் காலம் தொடங்கியது. தேசபக்தி, சமூகச் சீர்திருத்த ரீதியிலான சினிமாக்களின் உரத்தகுரல்’ 50களின் இறுதிக்குள் சலிப்பூட்டத் தொடங்கியிருக்கக்கூடும்.

       மேலும் 60களின் சமூக பொருளாதார மாற்றங்கள், மேல்நடுத்தரவர்க்கக் கதைக்களங்கள், உணர்ச்சிமயமான உறவுச்சிக்கல்களுடன் கூடிய திரைப்படங்களுக்குக்கான சூழலை உருவாக்கியது. 
 

            பீம்சிங்கின் நடுத்தரக் குடும்பப் பின்புலத்தில் நடக்கும் கதைகள் அப்போது பெருகிக்கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு நெருக்கமானதாக விளங்கியிருக்கக் கூடும். சினிமா மெல்ல மெல்ல சாமான்யர்களை நோக்கி நெருங்க நெருங்க திரைப்பட இசையிலும் மாற்றங்களுக்கான தேவை எழத்தொடங்கியது.
 
      இந்த பரிணாம மாற்றத்தைச் சரியாக உள்வாங்கியவர்களாக எம்.எஸ்.வி. கூட்டணி விளங்கியது. கே.வி.மகாதேவனின் ராக அடிப்படைகள் தூக்கலாக வெளிப்படும் மெட்டுக்களுக்கு மாற்றாக சங்கீத இலக்கண மீறல்களைப் பற்றிய கவலையின்றி நெஞ்சம் மறப்பதில்லைபோன்ற உணர்ச்சிக்கும் இனிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பாடல்களை அவர்கள் உருவாக்கினர்.

            திரைப்படப் பாடல் என்பது திரைப்படத்தின் ஒரு பகுதிதான். திரைப்படங்கள் அல்லது எந்த வெகுசனக் கலையும் அந்தந்தக்காலங்களின் சமூக அரசியல் சூழல்களுக்கேற்ற கதைக்களங்களுக்குள் இயங்கத் தொடங்கும் என்பதும் இசையும் அதன் ஒரு பகுதியாகத்தான் இயங்க முடியும் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே. 70களின் சமூகநிலைமைகளைக் கணக்கில் கொள்ளாமல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாகவும் பட்டாக்கத்தி பைரவனாகவும் உலாவந்த எம்.ஜி.ஆரையும் சிவாஜி கணேசனையும் சப்பாணியும் பரட்டையும் தூக்கிக்கடாசியதைப் போன்ற உதாரணங்கள் நிறைய உண்டுதானே?

       
           விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் தன்னிச்சையாக இதைச் செய்துவிடவில்லை. பீம்சிங், ஶ்ரீதர் போன்ற  இயக்குநர்களே இதன் மூலவர்கள். நான் காட்சிபூர்வமாக கதை சொல்லும் சினிமா எடுக்கவே விரும்புகிறேன் சள சளவென்று பேசித்தள்ளும் சினிமாவையல்ல...(‘I always want to take a movie and not talkie’) என்று சொல்லிய ஶ்ரீதரின் படங்கள் மிகுபுனைவு நாயகர்களை தவிர்த்துவிட்டு பூமியில் நடமாடும் நாயகர்களை நாயகிகளை அவர்கள் காதலை, தோல்வியை வலியைப் பேச முற்பட்டபோது புதியதான இசைக்கான தேவை உருவாகியது.

            பாடல்களும் கர்நாடக ராகங்களின் நுணுக்கமான கமகங்களை உதறித்தள்ளி ராக ஆலாபனைகளின் விஸ்தாரங்களைக் குறைத்துக் கொண்டு உணர்ச்சிபூர்வமான மெட்டுக்களுக்கு மாறத் தொடங்கின. வெகுசனக் கலைகளில் தனிநபர்களே புதிய போக்குகளை உருவாக்குகிறார்கள் என்று கூறுவதைவிட காலத்தின் தேவைகளை சில தனிப்பட்ட கலைஞர்கள் நிறைவேற்றி வைக்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

            இந்திய திரை இசையென்பது இந்திய மெட்டுக்களை (பாடலின் உடலாக இருக்கும் மெட்டுக்கள் ) மேற்கத்திய இசைக்கருவிகளின் அரவணைப்போடு (Orchestration எனப்படும் இசைச் சோடனை) கொடுப்பதுதான். அதாவது ஹார்மோனியம், அக்கார்டின், வயலின், கிதார், பியானோ, கிளார்னட் இன்னபிற கருவிகளை இணைத்து வழங்குவதாகும். மேற்கண்ட கருவிகளை உருவி விட்டால் இந்தியத் திரையிசையில் என்ன மிஞ்சும் என்று கற்பனை செய்துகொள்ளவேண்டியதுதான்.

            மேற்கத்திய இசை வகைகளை, ஆங்கிலக்கல்வி பெற்ற மேட்டுக்குடியினரின் காலனியச் சார்பும் மோகமும் ஆங்கிலேய வாழ்க்கைமுறையை மட்டுமின்றி ஆங்கில சினிமாக்களையும் இசையையும்கூட அவர்களுக்கு அணுக்கமானதாக மாற்றியிருந்தது. ஆகவே பிரிட்டிஷ் அமெரிக்க திரைப்படங்கள் மற்றும் கிராமபோன் வாயிலான இசை கேட்கும் வாய்ப்புகளும் இந்திய சினிமா இசையை நிழல் போல் தொடர்ந்து வந்தன.
ஆனால் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் எப்போதுமே தமிழனின் காதுகளுக்கு எந்தமாதிரியான ஓசைகளை அனுமதிப்பது என்பதில் கவனமாகவே இருந்தார்கள்.

            1960
களில் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ராக் இசையின் பொற்காலம் தொடங்கியிருந்தது. பீட்டிஸ் தொடங்கி ராக்(rock), ஹெவி மெட்டல் ராக்(Heavy metal rock), ரூட்ஸ் ராக்(Roots Rock), ப்ளூஸ் ராக்(Blues Rock), புரக்ரெஸ்சிவ் ராக்(Progressive Rock) என்று மின்னியப்படுத்தப்பட்ட கிதார்கள்(Electric Guitar) காதைச் செவிடாக்கிக் கொண்டிருந்த காலகட்டம். ஆனால் அதன் சுவடுகள் எதுவும் 60களின் தமிழ்சினிமாவில் காணக்கிடைப்பதில்லை. சில ராக் அண்ட் ரோல் பாணிகளைத்தவிர. 60களில் தமிழ்த்திரையிசையில் அதிகம் புழக்கத்தில் இருந்த இசைக்கருவிகள் பியானோ, வயலின், புல்லாங்குழல், கிதார், அக்கார்டின், செனாய், மேன்டலின், சந்தூர், சிதார், வீணை, தாளக் கருவிகளில் அதிகமும் வட இந்திய வாத்தியமான தபலா மற்றும் டோலக், குறைவாக மிருதங்கம், டபுள் பேங்கோஸ், டிரம்ஸ் போன்றவை.

            1932
இல் பாலக்காட்டுக்கு அருகே எலப்பள்ளி கிராமத்தில் பிறந்த மனையங்கத்து சுப்ரமணியன் நாயர் விஸ்வநாதன் என்கிற எம்.எஸ்.விஸ்வநாதன் மூன்றரை வயதில் தந்தையை இழந்து மாதம் மூன்று ரூபாய் கொடுத்து இசை படிக்க இயலாமல், இசைப்பள்ளியில் எடுபிடியாகச் சேர்ந்து இசை கற்று நாடகக் கம்பெனியில் நடிகனாகச் சேர்ந்து, பின் ஜூபிடர் பிச்சர்ஸில் ஆபீஸ் பையனாக இருந்து இசையமைப்பாளர் சுப்புராமனுக்கு உதவியாளராக இருந்து 1952இல் இசையமைப்பாளரானார். அடுத்த 8 ஆண்டுகளில் 20 படங்களுக்குமேல் இசை அமைத்து முடித்திருந்தார். ஆனால் அவருக்கான தனியான இடத்தைப் பற்றிய கற்பனைகள் எதுவுமில்லாமல் காரியமாற்றிக் கொண்டிருந்தார்.

            60
களின் முதல் ஐந்து ஆண்டுகளில் விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணி இசையமைத்த படங்கள்  மூலம் அடுத்த 15ஆண்டுகளுக்கு ஒரு மெல்லிசைப்போக்கை ஆரம்பித்து வைத்தனர்.
 
                
பீம்சிங்கின் பாசமலர்(1960), பாவமன்னிப்பு, பாலும் பழமும் (1961), ஶ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலையம்(1962), நெஞ்சம் மறப்பதில்லை(1963), காதலிக்க நேரமில்லை(1964), படகோட்டி, தெய்வத்தாய்(1964), ஆயிரத்தில் ஒருவன்(1965) என்று அமர்க்களமான படங்களாக அவை அமைந்தன.

          
காலங்களில் அவள் வசந்தம், அத்தான் என்னத்தான், வந்த நாள் முதல், எங்கிருந்தாலும் வாழ்க,   நினைப்பதெல்லாம், சொன்னது நீதானாபொன் ஒன்று கண்டேன், நான் கவிஞனும் இல்லை, நெஞ்சம் மறப்பதில்லை, அனுபவம் புதுமை, தரைமேல் பிறக்க, நான் ஒரு குழந்தை இப்படி 60களின் தொடக்கத்தில் எம்.எஸ்.வியின் படைப்பாற்றல் உச்ச ஸ்தாயியில் வெளிப்படத் தொடங்கியிருந்தது. இந்த இடத்தில் எம்.எஸ்.வி.யின் இனிய மெட்டுக்களை மெருகேற்றிய கண்ணதாசனின் பங்களிப்பு நினைவு கூறத்தக்கது.
 
     கண்ணதாசனின் கவித்துவமும் எளிமையும் இணைந்த வரிகள், டி.எம்.சௌந்தர்ராஜன் சுசீலா எல்.ஆர்.ஈஸ்வரி பி.பி.ஶ்ரீனிவாஸ் ஆகியோர்களின் உணர்ச்சி ததும்பும் குரல்கள்,   சிவாஜி, சாவித்திரி போன்ற அற்புதமான முகபாவங்களை அண்மைக்காட்சிகளில் (Close-up) வெளிப்படுத்தும் நடிகர்கள், எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, ஜெயலலிதா போன்ற வெகுமக்கள் திரளின் அபிமானம் மிக்க நடசத்திரங்கள் எல்லாம் சேர்ந்ததனால் உருவான ஒரு சகாப்தமே அது.

            பாவமன்னிப்பு படப்பாடல்கள் எனக்குள் பெரிய தாக்கத்தை உண்டுசெய்தன! அந்தப் பாடல்கள் புதுமையாகவும், அழகாகவும் இருந்தது போலத் தோன்றின. என்னைப்பொருத்தவரை விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் திரைப்பட இசை ஆர்க்கெஸ்ட்ரேஷனில் பெரிய மாறுதலைக் கொண்டுவந்தார்கள்! அதற்குப் பிறகு மிகத் திறமையான ஆர்க்கெஸ்ட்ரேஷன் மூலம் இளையராஜா பல புதிய இசை அனுபவத்தை வழங்கினார் என்று மூத்த வயலின் கலைஞர் நரசிம்மன் சொன்னது பொருத்தமானது. அப்போது இந்தித் திரைப்படங்களில் புழக்கத்திலிருந்த இசைச்சோடனை (Orchestration)க்கு இணையாக அல்லது மாற்றான ஒரு பாணியை எம்.எஸ்.வி. முயற்சித்து வெற்றிகண்டார்

                                   ஜி.ராமநாதன்

    60களில் எம்.எஸ்.வி., கே.வி. மகாதேவனைத் தவிர்த்து 25க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இயங்கினர். ஜி. ராமநாதன், எஸ். எம். சுப்பையா நாயுடு, சி. ராமச்சந்திரன், ஆர். சுதர்சனம், பி.ஜி.லிங்கப்பா, கண்டசாலா, சலபதிராவ், பெண்டியாலா, எஸ். தட்சிணாமூர்த்தி, ஆதிநாராயண ராவ், ஜி. கோவிந்தராஜுலு நாயுடு, அஸ்வத்தம்மா, வி. குமார், டி.ஆர். பாப்பா, வேதா, குன்னக்குடி வைத்தியநாதன், திவாகர், ஜி. தேவராஜன், கோவர்த்தனம், சூலமங்கலம் சகோதரிகள், எல். வைத்தியநாதன், சிட்டிபாபு, ஏ.எம். ராஜா , பானுமதி, டி.ஏ.கல்யாணம், மாஸ்டர்வேணு இப்படி பட்டியல் நீள்கிறது.

                 1936
தொடக்கம் ஆரம்பகால பேசும்படங்களில் இசையமைக்கத்தொடங்கிய ஜி.ஆர் ராமநாதன்
1964 ல் அருணகிரிநாதர் வரை 110 படங்களுக்குமேல் இசையமைத்தவர். 60களில் சுமார் 10படங்களுக்கு இசையமைத்திருந்தார். ஆனாலும் 60களின் மெல்லிசைப்போக்கில் அவரால் இணைந்து கொள்ள இயலவில்லை.



                                                                          வி.குமார்


    காதோடுதான் நான் பேசுவேன், ஒரு நாள் யாரோ, புன்னகை மன்னன் பூ விழிக்கண்ணன் ருக்மினிக்காக, ஆடி அடங்கும் வாழ்க்கையடா, மூத்தவள் நீ இருக்க... இப்படி அற்புதமான மெட்டுக்களை அளித்து 60களின் திரையிசையை மெருகேற்றியவர்களில் வி. குமார் முக்கியமானவர். பாலச்சந்தரின் வேறுபட்ட கதைகளுக்குத் தன் தனித்துவமான இசையைக் கொடுத்தவர். எண்ணிக்கையில் குறைவான படங்களாக இருந்தாலும் மெல்லிசைக்காலத்தின் இனிய நினைவுகளில் தங்கிப் போனவர்.

      
   பாடகராக வாழ்க்கையைத் தொடங்கி இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ஏ.எம்.ராஜா சொற்பமான ஆனால் அற்புதமான பாடல்களை வழங்கிச் சென்றவர். பாட்டுப்பாடவா, நிலவும் மலரும், சின்ன சின்ன கண்ணிலே, காலையும் நீயே, தனிமையிலே இனிமை காண முடியமா போன்ற பாடல்கள் 60களின் அழியாத நினைவுகள்.

            


 

 ஏ.எம்.ராஜா                                                                                                          எம்.பி.ஶ்ரீனிவாசன்

  
1969இல் மளையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட துலாபாரத்தில் தேவராஜன் இசையமைத்த காற்றினிலே காற்றினிலே..என்ற பாடலளவுக்குத் துயரத்தை இதயத்தின் அடியாழத்திலிருந்து வெளிப்படுத்திய பாடல் இன்றளவும் இல்லை. அதில் காற்றினிலே பெரும் காற்றினிலே.. ஏற்றிவைத்த தீபத்திலும் இருளிருக்கும்...எனும் கண்ணதாசனின் வரிகளை என்னவென்பது. தீபத்திலும் இருளிருக்கும்...என்று போகிற போக்கில் எழுதுகிற ஒரு பாடலாசிரியனை எங்கு சென்று தேடுவது.


         'சின்னசின்ன மூக்குத்தியாம்' என்று 60களில் ஆரம்பித்த எம்.பி. ஶ்ரீனிவாசன் தமிழிலில் இசையமைத்த படங்கள் குறைவென்றாலும் தனித்துவமான மெட்டமைப்புடைய அவரின் பாடல்களை காலம் தின்றுவிட முடியாது. எம்.எஸ்.வி கூட்டணி தவிர்த்து 60களின் இசையமைப்பாளர்களின் பங்களிப்பு எண்ணிக்கையில் குறைவென்றாலும் புறந்தள்ளிவிடக் கூடியதல்ல.

      கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது எம்.எஸ்.வி. தலைமைதாங்கிய அந்தப் பொற்கால இசைச் சகாப்தத்தை நினைவில் இசைத்துப் பார்ப்பது இரைச்சலே இசையாகிப் போன இக்காலத்தின் தேவையாகவும் இருக்கிறது. ஆம்.. காலங்களில் அதுவசந்தம்தான்.... 







என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.