புதன், 2 மார்ச், 2016

விசாரணை: எதற்கான யதார்த்தம்…?


ஊடகங்களின் பாராட்டொலிகள் உச்சத்தை எட்டியபிறகே ‘விசாரணையைப்’ பார்த்தேன். வெற்றிமாறனின் முந்தைய படத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது இதை ஒரு ‘.well crafted movie’ என்று சொல்ல முடியவில்லை. ஆனால் படம் முடியும் தறுவாயில் மூன்று நண்பர்களைச் சாகக் கொடுத்து மிச்சமிருப்பவர் என்று நூலாசிரியர் சந்திரக்குமாரின் குடும்பப் படத்தைக் காட்டும்போது படத்தின் எந்த தனிப்பட்ட காட்சியும் ஏற்படுத்தாத உணர்ச்சிமயத்திற்கு ஆட்பட்டு இருக்கையைவிட்டு எழமுடியாத நிலைக்கு ஆளானேன். ஆக ஒரு ரத்தமும் சதையுமான சக மனிதனுக்கு, இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனொருவன் இக்கதையின் பாத்திரம் எனும் உணர்வே படத்தின் பெரும் பலமாய் அமைந்திருக்கிறது.

படம் முடிந்து வந்த வேகத்தில் வாங்கி வைத்திருந்த சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நூலை வாசித்து முடித்தபோது ‘உண்மைக்கதை’ என்ற பின் ஒட்டு முழு உண்மையல்ல என்ற உண்மை புரிந்தது. ஒரு வழக்கில் குற்றவாளிகளாக்க இழுத்துச் செல்லப்படும் இளைஞரும் அவர் நண்பர்களும் சந்தித்த காவல்நிலைய சித்திரவதைகளே சந்திரக்குமாரின் நூல். இது திரைப்படத்தில் 25% மா? 50% மா? என்பதை பார்த்தவர்கள் யூகித்துக்கொள்ளலாம். மூலநூலாசிரியரின் கதை முடிந்தபின் தமிழ்நாட்டுப் போலீசிடம் மாட்டுவது, ஆடிட்டரின் கதை, ஏ.டி.எம். கொள்ளையர்களாக சித்தரிக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்படுவது… எல்லாமே இயக்குநரின் புனைவுகள். ஒரு உண்மைச் சம்பவத்தோடு புனைவைச் சேர்க்கக் கூடாது என்று விதிகள் எதுவும் இல்லை. ஆனால் இயக்குநர் ஊடகங்கள் மூலமாகவும் படத்தின் இறுதியில் இணைக்கும் குறிப்பின் மூலமாகவும் இது மொத்தமும் சந்திரக்குமாரின் கதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். இது இயக்குநரின் கலை நேர்மைக்கு உகந்ததாக இல்லை. இது அப்பட்டமான வணிகத் தந்திரம்போலவே  தோன்றுகிறது. உலகப்பார்வையாளர்களுக்கான, விருதுகளுக்கான பாதையை வெற்றிமாறன் ஒரு வழியாகக் கண்டடைந்துவிட்டார் என்று நம்பலாம். ஆனால் அது குறுக்குப்பாதைதான் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  எப்படியானால் என்ன? தமிழ்சினிமாக் குப்பைகளின் மத்தியில் இது ஒரு ரத்தினம்தான்.

      இரண்டாவதாக எனக்கு நெருடலாகப் பட்டது… இந்தப்படம் பார்வையாளனுக்கு எதைக் கடத்த முயல்கிறது என்ற விசயம். காவல்துறையும் அரசியல் மேல்மட்டங்களும் இணைந்துவிட்டால் அங்கே பூங்காவில் தூங்கி எழும் அன்றாடம் காய்ச்சியும் கோடிகளில் புரளும் ஆடிட்டர் போன்ற மேல் நடுத்தரவர்க்கத்தினனும் ஒன்றுதான் என்பதுதான் செய்தியா?. படம் முடிந்து வெளிவரும் பார்வையாளர்களின் முகங்கள் பீதியால் நிறைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. படம் முடிஞ்சு வீட்டுக்குப் போகவே பயமாயிருந்தது என்று ஒரு நண்பர் சொன்னார். எதையும் எப்படியும் சமாளித்து விடும் காவல்துறையைப் பற்றிய சித்தரிப்புகள் உண்மையின் பகுதிகள்தான். நடப்பு இதைவிட மோசமானதாகவும் இருக்கக்கூடும். ஆனாலும் இந்த யதார்த்தம் எதற்காக? பொதுமக்களின் சமூக உளவியலில் இப்படம் நிகழ்த்தும் தாக்கம் காவல்துறைக்கே சாதகமானதாகத் தோன்றுகிறது. எங்ககிட்ட வச்சுக்கிடாதீங்க பொதுமக்களே… என்று காவல்துறை சொல்கிற ஒரு படமாக மாறிவிடுகிறது. ‘இப்படி ஒருவருக்கு நடந்தது. அதை அப்படியே சொல்லியிருக்கிறேன். நான் என்ன செய்ய?’ என்று இயக்குநர் தப்பித்துவிட முடியாது. ஏனென்றால் அவ்வளவு புனைவுகளைக் கதையில் இணைத்தவர் ஏன் இப்படி ஒரு நம்பிக்கை வறட்சியை, பயத்தை, கையறுநிலையை பார்வையாளர்களின் மனங்களில் விதைத்தார் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மூன்றாவதாக ஏன் இதையெல்லாம் விட புனைவுத்தன்மையும் அதிரவைக்கும் சம்பவங்களும் இணைந்த பல நாட்டு நடப்புகளை நம் இயக்குநர்கள் பாரா முகத்துடன் கடந்து போகிறார்கள்? என்ற துணைக்கேள்வியும் எனக்குள் தேவையில்லாமல் எழுந்ததை தவிர்க்க இயலவில்லை. விமர்சனம் என்பது ஒரு படத்தை புகழ்வதற்கோ திட்டித்தீர்ப்பதற்கோ மட்டுமானதல்ல என்றே நான நம்புகிறேன். ஒரு படைப்பை முன்வைத்து  நேரடித் தொடர்பு இருந்தும் இல்லாமலும் கூட நம்மை கிளர்த்தும் சிந்தனைகளையும் சொல்லிப்பார்க்கலாம்தானே. 20ஆண்டுகளுக்கு மேல் வழக்காக நடந்த ‘வாச்சாத்தி போலீஸ் வன்முறை’ ஒரு அற்புதமான திரைப்படத்திற்கான சம்பவம் அல்லது வரலாறு. கம்யூனிச இயக்கத்தினர் முன்னெடுத்து நடத்திய வரலாறு காணாத வரலாறு. பெண்களைக் கூட்டு வல்லுறவு செய்த காவல்துறை, அதை மறைக்க அரசு எந்திரம் செய்த முயற்சிகள்.. எல்லாவற்றையும் கடந்து அச்சம்பவத்தில் சம்மந்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட (240 என்று நினைவு) அத்தனை பேரும் குற்றவாளிகள் எனத்தீர்ப்பு எழுதப்பட்டபோது குற்றவாளிகளில் 50பேருக்கும் மேல் மரணமடைந்திருந்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்த இழப்பீட்டைப் பெறுவதற்கான போராட்டம் தனிக்கதை…ஆனால் இதை நம் இயக்குநர்கள் தொடமாட்டார்கள். ஏனெனில் இதைப் படமாக்கினால் தி.மு,க., அ.தி.மு.க., அரசுகளைத் தொட்டாகவேண்டுமே? அதெல்லாம் நடக்கிற காரியமல்லவே! அதனால்தான் ஒருவேளை இதையெல்லாம் கண்டும் காணாமல் போய்விடுகிறார்கள் போலும்.


தமிழகத்தில் சினிமாத் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். சினிமாவைக் கலாப்பூர்வமாகக் கையாளக்கூடியவர்களும் பத்துக் கணக்கில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சமூக அவலங்களைப் பேசமுயலும் போது அதிகார மையங்களை நோக்கிக் குரலை உயர்த்தும் துணிச்சல் உள்ளவர்களைத்தான் காணமுடிவதில்லை.

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.