திங்கள், 2 அக்டோபர், 2017

சிவாஜி எனும் கலைஞனை நினைவு கூர்வதென்பது...



தமிழ்சினிமாவின் இரண்டு நடிகர்கள் ஒரு ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தார்களாம். (அப்போது பிரபலமாக இருந்த நடிகர்களை அவர் குறிப்பிட்டார். இப்போதும் உங்களுக்குப் பிடித்த/ பிடிக்காத இரண்டு நடிகர்களை நீங்கள் ஆட்டோவில் அமர்த்திக் கொள்ளலாம்.) அவர்கள் பயணித்த ஆட்டோவுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் பின்புறத்தில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்ததாம். இருவரில் இளையவரான ஒரு நடிகர் மூத்தவரிடம் கேட்டாராம்… அண்ணே அந்த ஆட்டோவுல..’ தோலின் பளபளப்பும் சுரணையற்ற தன்மையும் தொழுநோயின் அறிகுறிகள்னு’ போட்டுருக்கே, நம்ம தோலும் பளபளப்பாத்தான் இருக்கு இயக்குநர்கள் நடிக்கச் சொல்லும்போது எந்த உணர்ச்சிகளும் வர்ற மாதிரி தெரியல… அப்ப நமக்கும் தொழு நோயான்னே…’ என்றாராம் அப்பாவியாக…நம் சினிமா நாயகர்கள் பலரின நடிப்பாற்றலைப் பார்க்கும் போது என்னுடைய நண்பர் முத்துராமலிங்கத்தின் புகழ்பெற்ற இந்த நகைச்சுவை துணுக்கு நினைவுக்கு வந்துவிடும்.

இது ஒரு நகைச்சுவை மட்டுமல்ல என்பது நம்நாயகர்களின் ஒரேவிதமான நடிப்பை பார்த்து வருபவர்களுக்குத் தெரியும். இத்தகைய யோசனைகளின்போது சிவாஜி எனும் கலைஞனை நினைத்தாக வேண்டியிருக்கிறது.

சிவாஜி மணிமண்டபத்தையொட்டி சிவாஜி பற்றிய பதிவுகள் ஊடகங்களில் புழங்குவதைப் பார்த்தபோது சிவாஜியோடு எங்கள் பேராசிரியர் வசந்தன் அவர்கள் சிவாஜியைப் பற்றிப் பேசியவைகளும் சேர்ந்து நினைவுகளை நனைக்கின்றன. பேராசிரியரிடம் உரையாடுவதற்கு முன்னால் எனக்கு சிவாஜி பற்றிய நல்ல சித்திரங்கள் எதுவுமில்லை. காரணம் நான் சிறுவயதில் அதிகம் சினிமாக்கள் பார்ப்பதை ஊக்குவிக்காத கிறித்தவ குடும்பச் சூழலில் வளர்ந்தவன். மேலும் நான் வாழ்ந்த ஊரிலிருந்த திரையரங்கம் வெகுசீக்கிரமே ‘தீப்பட்டி ஆபீசாக’ மாற்றமடைந்திருந்தது.

நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்தகாலத்தில் சிவாஜியின் சகிக்கமுடியாத படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலம். மதுரை சினிப்பிரியா தியேட்டரில் நெஞ்சத்தைக்கிள்ளாதேயில் ‘பருவமே புதிய பாடல் பாடு’ என நாங்கள் சொக்கிக்கிடந்தபோது மினிப்பிரியாவில் திரிசூலம், பட்டாக்கத்தி பைரவன் வகையறா படங்களில் சிவாஜி மிரட்டிக்கொண்டிருந்தார். ஆக எனக்கு சிவாஜியின் பழைய படங்களோடு பெரிய பரிச்சயம் இருக்கவில்லை. நடிப்பின் இமயம் சிவாஜி என்பது ஒரு தேய்வழக்குபோல் எல்லோராலும் சொல்லப்பட்டு வந்ததேதவிர ஏன் அவர் நடிப்பின் இமயம்? என்பதை யாரும் விலாவாரியாகப் பேசியதில்லை. முதன்முறையாக வசந்தன் ஒரு அமர்வில் சிவாஜியின் பாடல் காட்சிகளில் ஒன்றான ‘உள்ளம் என்பது ஆமை’ யில் சிவாஜி கைகளைப் பயன்படுத்துவதைப் பற்றி சிலாகித்துக்கொண்டிருந்தார். மேற்கத்திய கிளாசிக் சினிமாக்களைக் கரைத்துக் குடித்த அவர் கிளார்க் கேபிள், மார்லன் பிராண்டோ வரைக்குமான வரிசையில் சிவாஜியைப் பொருத்தி பேசத்தொடங்கியதைத் தொடர்ந்து சிவாஜியைக் கவனிக்கத் தொடங்கினேன்.

அவருடைய பழைய பாடல்களில் குறிப்பாக கறுப்பு வெள்ளைப் படங்களில் சிவாஜியின் அசைவுகள், நகர்வுகள்(movements), நிற்றல் நிலைகள்(postures) மிகுந்த கவித்துவத்தோடு வெளிப்படுவதைக் காணமுடிந்தது. குறிப்பாக கை மற்றும் விரலசைவுகளில் அவர் ஒரு அபாரமான நடிகர் என்பதை வெளிப்படுத்தியபடியே இருப்பார். ஒரு நடிகனுக்கு முகம் தவிர்த்து கைகளே பிரதானமான நடிப்புக் கருவியாக அமைகிறது என்பதைத் தெரிந்திருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர்கள் மிக அபத்தமாகப் பயன்படுத்துவது கைகளைத்தான். உள்ளம் என்பது ஆமை எனும் அந்தப்பாடலில் அவர் விரல்கள் நடன அசைவுகளை ஒத்ததான நளினத்துடன் இயங்குவதை பார்த்துக்கொண்டே இருக்கமுடியும். சிவாஜி எனும் கலைஞனைப் புரிந்த இயக்குநர்கள் இருந்ததால்தான் அவர் பாடல்களில் குளோஸ்-அப் மற்றும் மீடியம் ஷாட்களே மிகுந்திருக்கும். இப்போதும் கூட நம் இயக்குநர்கள் நம் நாயகர்களைப் புரிந்து வைத்திருப்பதால்தான் பாடல் காட்சிகளைப் படமாக்கச் செல்லும்போது ஒரு திருவிழாக்கூட்டத்தையே லாரிகளில் அள்ளிச் செல்கிறார்கள் போலும். ஒரு ஒப்புமைக்காக சிவாஜியின் ‘உள்ளம் என்பது ஆமையையும்’ எம்.ஜி.ஆரின்.’புதிய வானம் புதிய பூமி’ இரண்டுபாடல்களையும் அவதானித்தால் இருவருக்குமான பாரதூர இடைவெளிகளைப் புரிந்து கொள்ள முடியும். புதிய வானம் பாடலில் புரட்சித்தலைவர் ஒரு வெற்று சூட்கேசையும் ஒரு சிறு கோலையும் ( அது மந்திரக்கோல் போலவும் வாக்கிங் செல்லும் போது குறுக்கிடும் பைரவர்களை விரட்டுவதற்கானது போலவும் தோற்றமளிக்கிறது) வைத்துக்கொண்டு கைகளை நெஞ்சுக்கும் வானத்துக்குமாக விசிறிக்கொண்டிருப்பார். அதிகமும் லாங் ஷாட்களில் ஓடிக்கொண்டே இருப்பார், கேமராவை அருகில் கொண்டுவந்துவிடாதீர்கள் என்பது போல்.

https://www.youtube.com/watch?v=boyVeLaj14Y

https://www.youtube.com/watch?v=fa6LPvNAbJ0


இப்படி சிவாஜியின் நடிப்பின் பல்வேறு அம்சங்கள் பற்றி விரிவாகப் பேசமுடியும். பேச வேண்டும். அப்படிப் பேசுவதாலேயே எதிர்காலத் தலைமுறைக்கு சிவாஜி எனும் கலைஞனைக் கடத்தமுடியும். ஆனால் எனக்குத் தெரிந்து சிவாஜி பற்றிய ஆய்வு நோக்கிலான சில கட்டுரைகள் தவிர்த்து பெரும் பதிவுகள் இல்லை. ஏனெனில் இன்னும் 25 ஆண்டுகளுக்குப்பின் சிவாஜியின் படங்கள் புழக்கத்தில் இருக்கப்போவதில்லை. சினிமா எப்போதும் பெரும்பாண்மை மக்களோடு புழங்குவதுதான். ஆக சிவாஜியின் படங்களைத் தேடிப்பார்க்கவேண்டுமென்ற தேவை இருந்தாலொழிய யாரும் தேடப் போவதில்லை. எதிர்கால நடிகர்கள், ஆய்வாளர்கள், கலை விமர்சகர்களின் தேடுதலுக்கு உரியவராக சிவாஜி இருந்தால் மட்டுமே சிவாஜி எனும் கலைஞன் காலம் கடந்தும் வாழ்வார். அப்படித்தான் மைக்கேல் ஆஞ்சலோ, மொசார்ட், லாரன்ஸ் ஒலிவியர், சேக்ஸ்பியர், கம்பர் போன்ற மகா கலைஞர்கள் இன்றும் அழியாமல் வாழ்கிறார்கள். எந்தக்கலை வடிவத்தையும் சுவைஞர்களும் விமர்சகர்களுமே தங்கள் பதிவுகளால் கடத்துகிறார்கள். அதைவிடுத்து புகைப்படங்களையும் சிலைகளையும் உள்ளடக்கிய மணிமண்டபங்களால் எந்தக் கலைஞனையும் இருத்திவிட முடியாது. அல்லது மணிமண்டபங்களையாவது அர்த்தப்பூர்வமாக வடிவமைக்க வேண்டும். விமர்சகர் ஞாநி ஒரு முறை பரிந்துரைத்ததைப் போல ( ஒரு நிரந்தர நாடக அரங்கம், நூலகம், சிவாஜியின் படங்களை எப்போதும் பார்க்கும் வசதி) செய்வதற்கு அரசோ, நடிகர் சங்கமோ, சிவாஜியின் குடும்பத்தினரோ கூட எந்தப் பிரயத்தனமும் செய்யப்போவதில்லை.

நண்பர் ஒருவர். இலங்கையில் பேராசிரியராக இருந்து புலம் பெயர்ந்து தற்போது லண்டனில் வசிப்பவர். அவருடைய இளம் பிராயத்தில் சிவாஜி படங்கள் தமிழகத்தில் ரிலீஸ் ஆன அன்றே பார்த்துவிடும் துடிப்பில் கள்ளத்தோணியில் தமிழகம் வந்து படம்பார்த்துச் செல்லும் சிவாஜியின் பரம ரசிகர். வெறுமனே ரசிகராக மட்டுமல்லாமல் அவரை உலக நடிகர்களோடும் நடிப்புக்கோட்பாடுகளோடும் இணைத்துப் பேசக்கூடியவர். அவர் சிவாஜிவை மையமாகக் கொண்டு ஒரு கருத்தரங்கை நடத்தி அதில் வரும் கட்டுரைகளை நூலாக்க வேண்டும் என்று ஏறத்தாழ 4ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார். இந்தியா வரும்போதெல்லாம் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் என செய்த முயற்சிகள் எதுவும் ஈடேறவில்லை. சிலமாதங்களுக்கொருமுறை ‘அந்த சிவாஜி செமினார்…’ என்பதான தொலைபேசி உரையாடல்களாக மட்டுமே இருந்துவருகிறது.

ஆகவே காலத்தால் அழிக்க முடியாத கலைஞன் என்ற வாய்ப்பேச்சுகளால் ஆகப் போவதொன்றுமில்லை. உருப்படியாகச் செய்ய வேண்டுவன பற்றி யோசிக்க வேண்டும். முன்னெடுக்கப் போவது யார்? ரசிகர்களா? நடிகர் சங்கமா? அரசா? பல்கலைக் கழகங்களா? அவரின் குடும்பத்தாரா? யாரறிவார்?







வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

தரமணி : புராதன மனங்களும் சைபர் உலகமும்



                  உலகமயம் கலைத்துப்போட்டிருக்கிற நம் பண்பாட்டு வாழ்வின் மீதான கவலை, அச்சம், விமர்சனங்களோடு சமகால இந்திய 'ஒருமையாக்கல்' அரசியல் ஏற்படுத்திவரும் பதட்டங்களையும் சுமந்து திரியும் ஒரு இடதுசாரியாகவும் தமிழ்தேசியாவாதியாகவும் பெண்ணிய விரும்பியாகவும் தலித்திய ஆதரவாளராகவும் அல்லல்படும் ஒரு படைப்புமனம் தமிழ் சினிமாவுக்குள் மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும்? கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி ஆகிய படங்களாக வெளிப்படும்.
                 தரமணி, மரங்களை இழந்த புறாக்களின் கதை. பிழைப்புக்காய் புலம்பெயர்ந்து அநாதையாய் செத்துப்போகும் ஒரு வடமாநில தொளிலாளியின் கதை. சென்னையின் மின்சார ரயிலில் பணத்தைப் பறிகொடுக்கும் முன்னரே பிண்மாக பயணமாகும் ஒரு நாகூர் பெரியப்பாக்களின் கதை. வீட்டில் அடைந்துகிடக்கும் மனைவிகளைப் பொருட்படுத்தாத அதிகாரிகளின் கதை. பெருநகரங்களின் அடைபட்ட வீடுகளுக்குள் வாழ்க்கையின் சலிப்பைத் துரத்த முடியாமல் அலைபேசிகளின் மாய வலைக்குள் சிக்கிக்கொள்ளும் இல்லத்தரசிகளின் கதை. அரைவேக்காட்டு கல்வி பெற்று, எதிர்ப்படும் பெண்களையெல்லாம் காதலிக்கத் தயாராகும், காதலுக்காக பொய்யை, திருட்டை, தியாகங்களைச் செய்யச் துடிக்கும், காதலித்தபின் அவளைப் உடமையாக பாவித்து உடைத்து நொறுக்கத் தயங்காத புராதன மனமும் சைபர் உலக தந்திரோபாயங்களும் பின்னிப்பிணைந்த இந்திய ஆண்மகன்களில் ஒருவனான ஒரு இளைஞனின் கதை. இத்தனை கதைகளினூடாக, ஒரு பால் ஈர்ப்புடையவனான தன் கணவனைப் புரிந்து கொள்பவளும் தொடர்ந்து எதிர்ப்படும் பலதரப்பட்ட ஆண்மகன்களை வெவ்வேறாய் எதிர்கொள்பவளும், வாழ்க்கையின் அழகை, கோரத்தை, தற்செயலை அற்புதமாய் கையாள்பவளுமான ஒரு இளம்தாயின் கதையுமாகும்.
                   இந்த நூற்றாண்டில் யார் ஒருவருடைய கதையும் அந்த ஒருவருடைய கதை மட்டுமல்ல என்ற புரிதல் இருந்தால் மட்டுமே ராமுடைய தரமணியின் முழுமை சிதைக்கப்பட்ட, தொடக்கமும் முடிவுமற்ற இந்தப்படத்தை ரசிக்க முடியும்.
                   ராமுடைய குரல் இடையீடுகள் பார்வையாளர்களுக்குக் கிளர்ச்சியையும் எரிச்சலையும் ஒருங்கே ஏற்படுத்துவதைக் கண்டு ரசித்தேன். நாடகத்தில் ப்ரக்டுடைய காவிய அரங்கு (epic theatre) என்று உண்டு. பார்வையாளர்களை உணர்வு ரீதியாக நாடகத்துடன் ஒன்றிணையாமல் தடுத்து, இது நாடகம்தான் என்று உணர்த்திக்கொண்டே இருப்பது. இப்படி செய்வதற்குக் காரணம் பார்வையாளர்களுக்கு 'ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியைக்' கொடுப்பதே கலையின் நோக்கமாக இருக்கவேண்டுமேயல்லாமல் அவனை உணர்ச்சிக்கடலுக்குள் மூழ்க்கடிப்பதல்ல என்கிறது அந்தக் கோட்பாடு.
                   ராமின் குரல் இடையீடுகள் செய்வதும் இதைத்தான். இது இன்னொரு செல்வராகவன் படமாக மாறாமல் இருப்பதும் இந்த இடையீடுகளால்தான். ராமுக்கு சொல்வதற்குக் கதைகளோடு அரசியலும் இருப்பதால்தான் இந்த விவரிப்புமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன். எந்தக் கதையோடும் பலகதைகளும் அந்தக் கதைகளை உருவாக்கும் சமூக அரசியல் சூழல்களும் சொல்லப்பட வேண்டியவை என்ற ராமின் பன்முகப் புரிதலே அவரைத் தனித்து நிறுத்துகிறது.
                  ' அடிச்சா ஒன்றரை டன் பாக்கிறியா? பாக்கிறியா?' என்று சிங்கங்கள் பேச வேண்டிய வசனங்களை 75 கிலோ தேராத நம் கதாநாயகர்கள் பேசிக்கொண்டிருக்கிற தமிழ் சினிமாவில் ராமிற்குச் சொல்வதற்குக் கதைகளும் பேசுவதற்கு அரசியலும் இருப்பது எனக்கு முக்கியமாக படுகிறது.

                    பாத்திரங்களின் செயல்பாட்டில் தர்க்க ரீதியான தெளிவையும் குழப்பமற்ற கதைப்போக்கையும் 'நல்ல சினிமாவாகக்' கொண்டாடிப் பழகியவர்களுக்கு தரமணி ஒரு படமேயல்லதான். இத்தகைய நுணுக்கங்களுக்குள் நுழைய விரும்பாத பொதுப் பார்வையாளர்களுக்கும் கூட தரமணி சுவாரஸ்யமான படமாக இல்லாமல் போகலாம். பெருகிவரும் பெருநகர வாழ்வியலில், இணைய வலைப்பின்னல் சூழலில் உருவாகும் உறவுச்சிடுக்குகளும் அதன் கன பரிமாணங்களுமே எதிர்காலத்தில் இந்திய்ச் சமூகம் கையாள இயலாத விசயங்களாக இருக்கப் போகிறது. அவற்றை பேசுவதென்பது குழப்பமான, அதிரடியான, சிதறிய வடிவமாகத்தான் இருக்கும். அது ஒரு ‘நல்ல’ திரைப்படம் கொடுக்கும் சுகானுபவத்தை தராது என்பதோடு மேலும் கேள்விகளையும் குழப்பங்களையுமே உருவாக்கும். தீர்வுகளைத் தேடி ஜக்கிவாசுதேவிடம் போகும் மன நிலையோடு திரைப்படங்களை அணுகுபவர்களுக்கு இது ஒரு எரிச்சலூட்டும் படம்தான்.
                    ராமுடைய நாயகர்கள் தொடர்ந்து அவரைப்போலவோ அல்லது அவராகவோ (தோற்றத்தில்) இருக்கிறார்கள். இந்த மாதிரியான சுயமோகம் ஒரு இயக்குநருக்கு நல்லதாக இருக்குமென்று தோன்றவில்லை. ஆண்ரியா அற்புதமாக பொருந்திப் போகிறார். அவர் நடிக்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை. விபத்தில் அடிபட்டு செத்துக்கிடப்பவன் ஒரு வடமாநில தொழிலாளி என்பதைச் சொன்னால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பது சரிதான். ஆனால் புறாக்களின் கதையைச் சொல்லத்தான் வேண்டுமா? அது பறந்து கடந்து போகும் பாதையில் கண்ணாடிச் சுவர் இருப்பதை அறியாது மோதிச் செத்துவிழுவதே அழகான குறியீடாக அமைந்துவிடும்போது அதற்கு பொழிப்புரை சொல்லி அதன் கவித்துவத்தைக் காலி செய்துவிடுகிறது இயக்குரன் குரல்.
                   ஒரு தமிழ்ப் படத்தில் இவ்வளவு அழகான மழையைப் பார்த்ததில்லை. (படத்திலாவது தமிழர்கள் மழையை பார்க்கட்டுமே என்று நினைத்திருக்கலாம்) தேனி ஈஸ்வரின் அபூர்வமான கோணங்களும் ஒளியமைப்பும் அபாரம்.
                   இந்தப்படத்தின் ஆகப்பெரும் குறைபாடு இசைதான். இந்தப்படத்தின் ஒட்டுமொத்த வடிவத்துக்குச் சற்றும் பொருந்தாத இசை. இளையராஜா படைப்பூக்கமிக்க 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உலக இசை நடப்புகளை பார்க்க மறந்தார். யுவன் இப்போதே அந்த இடத்துக்கு வந்துவிட்டாற்போல தெரிகிறது. தரமணி வேண்டுவது உணர்ச்சிகரமான வழக்கமான இசை அல்ல. இந்தமாதிரியான நான் -லீனியர் படங்களுக்கு வேறுவிதமாக யோசித்திருக்கவேண்டும். இந்தி சினிமாவிலும் மளையாளத்திலும் திரையிசை அற்புதமான இடங்களுக்கு நகர்ந்துவிட்டது. தமிழிலும்கூட அரிதாக சில நல்ல முயற்சிகளைப் புதியவர்கள் செய்யத்தொடங்கியிருக்கிறார்கள். மேலும் குறிப்பாக யுவன், தனுஷ், விஜய் இவர்களெல்லாம் ஏன் பாடுகிறார்கள் என்றே தெரியவில்லை. தமிழ்சினிமாவில் எப்போதையும்விட சிறந்த பாடகர்கள் மலிந்திருக்கும் காலம் இது. சுமாரன மெட்டுக்களை யுவன் குரல் மேலும் சுமாராக்கிவிடுகிறது.

                     இது ஆகச்சிறந்த படம். ஒரு பெண்ணியத் திரைக்காவியம் என்றெல்லாம் கூறமாட்டேன். ஆனால் இன்றைய சமகால வாழ்வின் சிக்கலான அடுக்குகளுக்குள் மனிதர்களின் இருத்தலை வெவ்வேறு கோணங்களில் பார்க்கமுயல்கிற, புரிந்துகொள்ள விழைகிற ராமின் எத்தனிப்பு எனக்கு உவப்பானதாக இருக்கிறது. இந்தப் பயணத்தில் ராம் அவரின் ஆகச்சிறந்த திரைப்படத்தை எடுக்கப் போகிறார் அல்லது எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றே நம்புகிறேன்.

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.