வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

தரமணி : புராதன மனங்களும் சைபர் உலகமும்



                  உலகமயம் கலைத்துப்போட்டிருக்கிற நம் பண்பாட்டு வாழ்வின் மீதான கவலை, அச்சம், விமர்சனங்களோடு சமகால இந்திய 'ஒருமையாக்கல்' அரசியல் ஏற்படுத்திவரும் பதட்டங்களையும் சுமந்து திரியும் ஒரு இடதுசாரியாகவும் தமிழ்தேசியாவாதியாகவும் பெண்ணிய விரும்பியாகவும் தலித்திய ஆதரவாளராகவும் அல்லல்படும் ஒரு படைப்புமனம் தமிழ் சினிமாவுக்குள் மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும்? கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி ஆகிய படங்களாக வெளிப்படும்.
                 தரமணி, மரங்களை இழந்த புறாக்களின் கதை. பிழைப்புக்காய் புலம்பெயர்ந்து அநாதையாய் செத்துப்போகும் ஒரு வடமாநில தொளிலாளியின் கதை. சென்னையின் மின்சார ரயிலில் பணத்தைப் பறிகொடுக்கும் முன்னரே பிண்மாக பயணமாகும் ஒரு நாகூர் பெரியப்பாக்களின் கதை. வீட்டில் அடைந்துகிடக்கும் மனைவிகளைப் பொருட்படுத்தாத அதிகாரிகளின் கதை. பெருநகரங்களின் அடைபட்ட வீடுகளுக்குள் வாழ்க்கையின் சலிப்பைத் துரத்த முடியாமல் அலைபேசிகளின் மாய வலைக்குள் சிக்கிக்கொள்ளும் இல்லத்தரசிகளின் கதை. அரைவேக்காட்டு கல்வி பெற்று, எதிர்ப்படும் பெண்களையெல்லாம் காதலிக்கத் தயாராகும், காதலுக்காக பொய்யை, திருட்டை, தியாகங்களைச் செய்யச் துடிக்கும், காதலித்தபின் அவளைப் உடமையாக பாவித்து உடைத்து நொறுக்கத் தயங்காத புராதன மனமும் சைபர் உலக தந்திரோபாயங்களும் பின்னிப்பிணைந்த இந்திய ஆண்மகன்களில் ஒருவனான ஒரு இளைஞனின் கதை. இத்தனை கதைகளினூடாக, ஒரு பால் ஈர்ப்புடையவனான தன் கணவனைப் புரிந்து கொள்பவளும் தொடர்ந்து எதிர்ப்படும் பலதரப்பட்ட ஆண்மகன்களை வெவ்வேறாய் எதிர்கொள்பவளும், வாழ்க்கையின் அழகை, கோரத்தை, தற்செயலை அற்புதமாய் கையாள்பவளுமான ஒரு இளம்தாயின் கதையுமாகும்.
                   இந்த நூற்றாண்டில் யார் ஒருவருடைய கதையும் அந்த ஒருவருடைய கதை மட்டுமல்ல என்ற புரிதல் இருந்தால் மட்டுமே ராமுடைய தரமணியின் முழுமை சிதைக்கப்பட்ட, தொடக்கமும் முடிவுமற்ற இந்தப்படத்தை ரசிக்க முடியும்.
                   ராமுடைய குரல் இடையீடுகள் பார்வையாளர்களுக்குக் கிளர்ச்சியையும் எரிச்சலையும் ஒருங்கே ஏற்படுத்துவதைக் கண்டு ரசித்தேன். நாடகத்தில் ப்ரக்டுடைய காவிய அரங்கு (epic theatre) என்று உண்டு. பார்வையாளர்களை உணர்வு ரீதியாக நாடகத்துடன் ஒன்றிணையாமல் தடுத்து, இது நாடகம்தான் என்று உணர்த்திக்கொண்டே இருப்பது. இப்படி செய்வதற்குக் காரணம் பார்வையாளர்களுக்கு 'ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியைக்' கொடுப்பதே கலையின் நோக்கமாக இருக்கவேண்டுமேயல்லாமல் அவனை உணர்ச்சிக்கடலுக்குள் மூழ்க்கடிப்பதல்ல என்கிறது அந்தக் கோட்பாடு.
                   ராமின் குரல் இடையீடுகள் செய்வதும் இதைத்தான். இது இன்னொரு செல்வராகவன் படமாக மாறாமல் இருப்பதும் இந்த இடையீடுகளால்தான். ராமுக்கு சொல்வதற்குக் கதைகளோடு அரசியலும் இருப்பதால்தான் இந்த விவரிப்புமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன். எந்தக் கதையோடும் பலகதைகளும் அந்தக் கதைகளை உருவாக்கும் சமூக அரசியல் சூழல்களும் சொல்லப்பட வேண்டியவை என்ற ராமின் பன்முகப் புரிதலே அவரைத் தனித்து நிறுத்துகிறது.
                  ' அடிச்சா ஒன்றரை டன் பாக்கிறியா? பாக்கிறியா?' என்று சிங்கங்கள் பேச வேண்டிய வசனங்களை 75 கிலோ தேராத நம் கதாநாயகர்கள் பேசிக்கொண்டிருக்கிற தமிழ் சினிமாவில் ராமிற்குச் சொல்வதற்குக் கதைகளும் பேசுவதற்கு அரசியலும் இருப்பது எனக்கு முக்கியமாக படுகிறது.

                    பாத்திரங்களின் செயல்பாட்டில் தர்க்க ரீதியான தெளிவையும் குழப்பமற்ற கதைப்போக்கையும் 'நல்ல சினிமாவாகக்' கொண்டாடிப் பழகியவர்களுக்கு தரமணி ஒரு படமேயல்லதான். இத்தகைய நுணுக்கங்களுக்குள் நுழைய விரும்பாத பொதுப் பார்வையாளர்களுக்கும் கூட தரமணி சுவாரஸ்யமான படமாக இல்லாமல் போகலாம். பெருகிவரும் பெருநகர வாழ்வியலில், இணைய வலைப்பின்னல் சூழலில் உருவாகும் உறவுச்சிடுக்குகளும் அதன் கன பரிமாணங்களுமே எதிர்காலத்தில் இந்திய்ச் சமூகம் கையாள இயலாத விசயங்களாக இருக்கப் போகிறது. அவற்றை பேசுவதென்பது குழப்பமான, அதிரடியான, சிதறிய வடிவமாகத்தான் இருக்கும். அது ஒரு ‘நல்ல’ திரைப்படம் கொடுக்கும் சுகானுபவத்தை தராது என்பதோடு மேலும் கேள்விகளையும் குழப்பங்களையுமே உருவாக்கும். தீர்வுகளைத் தேடி ஜக்கிவாசுதேவிடம் போகும் மன நிலையோடு திரைப்படங்களை அணுகுபவர்களுக்கு இது ஒரு எரிச்சலூட்டும் படம்தான்.
                    ராமுடைய நாயகர்கள் தொடர்ந்து அவரைப்போலவோ அல்லது அவராகவோ (தோற்றத்தில்) இருக்கிறார்கள். இந்த மாதிரியான சுயமோகம் ஒரு இயக்குநருக்கு நல்லதாக இருக்குமென்று தோன்றவில்லை. ஆண்ரியா அற்புதமாக பொருந்திப் போகிறார். அவர் நடிக்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை. விபத்தில் அடிபட்டு செத்துக்கிடப்பவன் ஒரு வடமாநில தொழிலாளி என்பதைச் சொன்னால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பது சரிதான். ஆனால் புறாக்களின் கதையைச் சொல்லத்தான் வேண்டுமா? அது பறந்து கடந்து போகும் பாதையில் கண்ணாடிச் சுவர் இருப்பதை அறியாது மோதிச் செத்துவிழுவதே அழகான குறியீடாக அமைந்துவிடும்போது அதற்கு பொழிப்புரை சொல்லி அதன் கவித்துவத்தைக் காலி செய்துவிடுகிறது இயக்குரன் குரல்.
                   ஒரு தமிழ்ப் படத்தில் இவ்வளவு அழகான மழையைப் பார்த்ததில்லை. (படத்திலாவது தமிழர்கள் மழையை பார்க்கட்டுமே என்று நினைத்திருக்கலாம்) தேனி ஈஸ்வரின் அபூர்வமான கோணங்களும் ஒளியமைப்பும் அபாரம்.
                   இந்தப்படத்தின் ஆகப்பெரும் குறைபாடு இசைதான். இந்தப்படத்தின் ஒட்டுமொத்த வடிவத்துக்குச் சற்றும் பொருந்தாத இசை. இளையராஜா படைப்பூக்கமிக்க 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உலக இசை நடப்புகளை பார்க்க மறந்தார். யுவன் இப்போதே அந்த இடத்துக்கு வந்துவிட்டாற்போல தெரிகிறது. தரமணி வேண்டுவது உணர்ச்சிகரமான வழக்கமான இசை அல்ல. இந்தமாதிரியான நான் -லீனியர் படங்களுக்கு வேறுவிதமாக யோசித்திருக்கவேண்டும். இந்தி சினிமாவிலும் மளையாளத்திலும் திரையிசை அற்புதமான இடங்களுக்கு நகர்ந்துவிட்டது. தமிழிலும்கூட அரிதாக சில நல்ல முயற்சிகளைப் புதியவர்கள் செய்யத்தொடங்கியிருக்கிறார்கள். மேலும் குறிப்பாக யுவன், தனுஷ், விஜய் இவர்களெல்லாம் ஏன் பாடுகிறார்கள் என்றே தெரியவில்லை. தமிழ்சினிமாவில் எப்போதையும்விட சிறந்த பாடகர்கள் மலிந்திருக்கும் காலம் இது. சுமாரன மெட்டுக்களை யுவன் குரல் மேலும் சுமாராக்கிவிடுகிறது.

                     இது ஆகச்சிறந்த படம். ஒரு பெண்ணியத் திரைக்காவியம் என்றெல்லாம் கூறமாட்டேன். ஆனால் இன்றைய சமகால வாழ்வின் சிக்கலான அடுக்குகளுக்குள் மனிதர்களின் இருத்தலை வெவ்வேறு கோணங்களில் பார்க்கமுயல்கிற, புரிந்துகொள்ள விழைகிற ராமின் எத்தனிப்பு எனக்கு உவப்பானதாக இருக்கிறது. இந்தப் பயணத்தில் ராம் அவரின் ஆகச்சிறந்த திரைப்படத்தை எடுக்கப் போகிறார் அல்லது எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றே நம்புகிறேன்.

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.